இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு…. கன்னியாகுமரி தொகுதி எம்.பி விஜய் வசந்த் கண்டனம்!!


”இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.”

இலங்கை கடற்படையினாரால் சிறைபிடிக்கப்பட்ட  மீனவர்களை விடுதலை செய்யக் கோரி மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் மீனவர்கள் கைது தொடர்பாக கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் அவர்கள் கண்டன அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.



அதில், பாரம்பரியமாக வங்கக்கடல் பகுதியில் மீன் பிடித்துப் பிழைப்பு
நடத்திவரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யப்படும் நடவடிக்கை தொடர் கதையாக உள்ளது. மீனவர்கள் மீது தாக்குதல். படகுகளைச் சேதப்படுத்துவது. மீன்பிடி வலைகளை அறுப்பது போன்ற செயல்களில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ராமேஸ்வரம் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 55 மீனவர்களையும். 8 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து அவர்களைக் கைது செய்துள்ளது.

இந்த சம்பவத்தைக் கண்டித்து மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்து வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களில் 14 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கடந்த மூன்று தினங்களில் மட்டும் 69 மீனவர்களையும் 10 விசைப் படகுகளையும் சிறைபிடித்து உள்ள இலங்கை கடற்படை உடனடியாக அதனை விடுவிக்க மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதோடு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் இலங்கை அரசுக்குத் தனது கண்டனங்களையும் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மேலும் மீனவர்கள் குறித்த பிரச்சினையில் செவிசாய்த்து அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இந்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மத்திய அரசு மீனவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

Exit mobile version