உயிர்காக்கும் துறையினருக்கு சங்கம் தேவையில்லை-உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

உயிர்காக்கும் துறையினருக்கு சங்கங்கள் தேவையில்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்களுக்கு பாராட்டு
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த முகமது யுனீஸ்ராஜா என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், 24 மணி நேரமும் பணிபுரியும் மருத்துவர்களை விடச் சில துறைகளில் 3 மணி நேரம் மட்டும் பணிபுரிபவர்களுக்குக் கூடுதல் ஊதியம் வழங்கப்படுகிறது. கொரோனா காலத்தில் மருத்துவர்களின் சேவை பாராட்டுக்குரியது.
சங்கங்கள் தேவையில்லை
தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் மருத்துவப் படிப்பு என்று வரும்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரவே விரும்புகின்றனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து வசதிகளும் இருப்பதே இதற்குக் காரணம். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் போன்ற உயிர் காக்கும் துறைகளில் பணிபுரிபவர்களுக்குச் சங்கம் என்பது தேவையில்லை. தமிழகத்தில் மருத்துவர்களுக்கான காலிப் பணியிடங்கள் எத்தனை உள்ளன? நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் போதுமான மருத்துவர்கள் உள்ளார்களா? என்பன குறித்துத் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்,
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்கின் விசாரணையை நவ.30ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Exit mobile version