சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க .ஸ்டாலின் தொடர்ந்துள்ள வழக்கில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் தான் போட்டியிட்டதாகவும், தவெக சார்பில் வி.எஸ்.பாபு போட்டியிட்டதாகவும், இதில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார் என தெரிவித்துள்ளார். மேலும், கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்கு பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்தின் அனுமதி கேட்கப்பட்டதாகவும், அனுமதி பெற்றவுடன் அதன் அடிப்படையில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தலைமையிலான வழக்கறிஞர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ததாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வாக்கு பதிவு மையங்களான 1, 17, 28, 32 ,75, 78, 79, 84, 87, 112, 122, 157,170 உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த விவி பேட், வாக்கு பதிவு இயந்திரம், கண்ட்ரோல் யூனிட் ஆகியவைகளை ஆய்வு
செய்ததாக சுட்டிக்காட்டி உள்ளார். அப்போது பெல் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட பொறியாளர் உடன் இருந்தார் என்றும் நூறு சதவீத விவிபேட் மற்றும் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டதென தெரிவித்துள்ளார்.
இதில் ஆறு வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் விவிபேடுகளை ஒப்புகை சீட்டுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் பிரதிநிதி சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதினார் என்றும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் இயந்திரம் தொடர்பாக புகார் செய்வதற்கென வெளிப்படையான ஒரு நடை முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். பல வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார். குறிப்பாக பல வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஹார்டுவேர் கோளாறு ஏற்பட்டதையும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பகோளாறுகளை சுட்டிக்காட்டிய பின்பும் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி தான் சோதனை மற்றும் சரிபார்த்தல் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். எனவே, பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி.பேடுகளை சரி பார்க்க வேண்டும் எனவும் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும், தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
