அரசு விழாவை அரசியல் மேடையாக்கியது மலிவான செயல் என்று இந்திய கம்யூனிஸ்டு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறி்க்கையில் கூறியிருப்பதாவது:-
காற்றில் பறப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட அரசு நிகழ்வை பா.ஜ.க. – அ.தி.மு.க. தேர்தல் கூட்டணி அறிவிப்பு மேடையாக்கப்பட்டுள்ளது. அரசு விழாவில் அரசின் திட்டங்களை விளக்குவதும், சில சாதனைகளை எட்டியிருப்பதாகவும் கூறுவது மரபாகும். ஜெயலலிதா அ.தி.மு.க. இனி எந்தக் காலத்திலும் பா.ஜ.க.வுடன் தேர்தல் கூட்டணி வைக்காது என்று உறுதியளித்ததை காற்றில் பறக்க விட்டு, அ.தி.மு.க. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடரும் என அறிவித்தனர்.
மலிவான செயல்
அரசு விழாவை, சிறிதும் வெட்கமின்றி தேர்தல் கூட்டணி அறிவிப்பு மேடையாக்கிய மலிவான செயலில் ஈடுபட்ட முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கும், இந்த மரபு மீறிய செயலைத் தடுக்கத் தவறிய தமிழ்நாடு அரசுக்கும் கண்டனத்தை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.