மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
சென்னை கமலாலயத்திலுள்ள பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் அருணாச்சலம், தன்னை பாஜகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அருணாச்சலம், தொலைநோக்கு சிந்தனையுடன் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு ஆதரவு தெரிவிக்குமாறு மக்கள் நீதி மய்யம் கூட்டத்தில் தெரிவித்தேன். விவசாயிகளின் நலன் கருதி முடிவு எடுக்காமல், கட்சியின் அடிப்படையில் முடிவு எடுத்தார்கள் என்று தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் விவசாயிகள் ஆதரவாக செல்லாமல், விரோதமாக செயல்படுகிறது. விவசாய விரோக போராட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கலந்துகொள்கிறது. ஆகவே, மனசாட்சிக்கு விரோதமாக செயல்பட முடியாமல் மநீமவில் அளித்த பொறுப்புகளை உதறிவிட்டு பாஜகவில் இணைந்து உள்ளளேன் என்றார்.
நடிகர் கமல்ஹாசன், 2018 பிப்ரவரி 21ஆம் தேதி மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் துவங்கினார். கட்சியில் முதற்கட்ட நிர்வாகிகள் பட்டியல் அந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதில் பொதுச் செயலாளராக அருணாச்சலம் நியமிக்கப்பட்டார்.
read more: அழகிரி கட்சி ஆரம்பித்தால் திமுகவுக்கு பாதிப்பில்லை: கனிமொழி
கடந்த ஆண்டு கட்சியின் கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு, பொதுச் செயலாளர் எண்ணிக்கை 6ஆக அதிகரிக்கப்பட்டது. தலைவர் அலுவலக பொதுச் செயலாளராக அருணாச்சலம் பதவி சுருக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யத்தில் இப்போது ஒருங்கிணைப்பு பொதுச் செயலாளராக அருணாச்சலம் இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.