அமைச்சர் காமராஜுக்கு கொரோனா பாதிப்பு!

அமைச்சர் காமராஜுக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சர் காமராஜ் திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு நிகழ்வை இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கிவைத்தார். அதன்பிறகு அவருக்கு இருமல் உள்ளிட்ட கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவே, கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.


இதனைத் தொடர்ந்து சென்னை மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் காமராஜ். இதுதொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்பவும், தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றிடவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்று கூறினார்.


உலகமெங்கில் லட்சக்கணக்கானோரை பாதிப்புக்குள்ளாக்கிய கொரோனா வைரஸ் தொற்று மக்கள் பிரதிநிதிகளையும் விட்டுவைக்கவில்லை. அமைச்சர் துரைக்கண்ணு, மக்களவை உறுப்பினர் வசந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

read more: என்ன நல்லது செய்தார் ஸ்டாலின்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!


சமீப காலமாக தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. கடந்த வாரத்தில் நாள் ஒன்றுக்கு 1,000 பேருக்கும் குறைவாகவே பாதிப்பு இருந்தது. இந்த நிலையில்தான் அமைச்சர் காமராஜ் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கே.பி.அன்பழகன், தங்கமணி, நிலோபர் கபில் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுவந்துள்ளனர்.

Exit mobile version