திமுகவில் இணைய தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவில் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தவருமான மு.க.அழகிரி, கடந்த 2014ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுகவில் இணைய அவர் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. சமீப காலமாக அழகிரி மீண்டும் அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கிறார் என்ற தகவல்கள் வந்தன.
அழகிரி அமித் ஷாவை சந்தித்து பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளிவர, அதனை மறுத்தார். மதுரையில் கடந்த 1ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரியிடம், வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது பங்கு கண்டிப்பாக இருக்குமெனவும், புதிய கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக போகப் போகத் தெரியும் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சென்னை கோபாலபுரத்திலுள்ள இல்லத்தில் தனது தாயார் தாயாளு அம்மாளை இன்று மு.க.அழகிரி சந்தித்துப் பேசினார். அப்போது, அவரது உடல்நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்துள்ளார்.
பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, “வரும் ஜனவரி 3ஆம் தேதி ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறேன். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி எனது முடிவை எடுப்பேன். 3ஆம் தேதிக்குப் பிறகுதான் கட்சி தொடங்குவதா அல்லது வேறு என்ன செய்யலாம் என்பது குறித்து முடிவெடுப்பேன்” என்று தெரிவித்தார்.
read more: வரம்பு மீறி பேசுகிறார் உதயநிதி: டிஜிபியிடம் அதிமுக புகார்!
அப்போது, திமுகவில் இணைய அழைப்பு ஏதும் வந்ததா என செய்தியாளர் கேட்க, அப்படி ஏதும் அழைப்பு வரவில்லை என்றவர், திமுகவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை எனவும் அதிரடியாகத் தெரிவித்தார். தொண்டர்கள் கட்சி ஆரம்பிக்கச் சொன்னால் ஆரம்பிப்பீர்களா என்ற கேள்விக்கு, “கண்டிப்பாக. ஆதரவாளர்களின் கருத்துப்படிதான் முடிவெடுப்பேன்” என்று கூறினார். ரஜினியை அவரது பிறந்தநாளுக்கு சந்திக்கமுடியவில்லை. அண்ணத்தே ஷூட்டிங் தடைபட்டுவிட்டதாக கேள்விப்பட்டேன். அவரை கட்டாயம் சந்திப்பேன் என்றும் அழகிரி கூறினார்.