தமிழ்நாடு-கேரளா இரு மாநில மக்களும் எனக்கு முக்கியமானவர்களே!!- பினராயி விஜயனுக்கு மு.க ஸ்டாலின் கடிதம்…

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பொறுத்தவரை இரு மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படும் என உறுதியளித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கேரளாவில் கன மழை பெய்து வரும் நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அதே சமயத்தில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வதந்திகளும் பரவி வருகின்றன. கேரளாவைச் சேர்ந்த சில சினிமா நட்சத்திரங்கள் அணைக்கு எதிராக ட்வீட் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு அதிகபட்சமாகத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம் எழுதினார்.

தற்போது முதல்வர் ஸ்டாலின் கேரள முதல்வருக்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில், “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவுவதற்குத் தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பொறுத்தவரை மழையால் நீர்மட்டம் உயர்ந்து வருவதை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். எங்கள் அதிகாரிகள் உங்கள் குழுவுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்து வருகின்றனர். அக்டோபர் 27-ஆம் தேதி காலை 9 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 2300 கியூசெக்ஸ் நீர்வரத்துடன் 136.6 அடியாக உள்ளது.

நீர் வரத்தின் அடிப்படையில் வைகை அணைக்குத் தொடர்ந்து அதிகபட்ச அளவிலான நீரை வெளியேற்றிக் கொண்டு இருக்கிறோம். நேற்று காலை 8 மணி முதல் வைகை அணைக்கு வினாடிக்கு 2300 கியூசெக்ஸ் நீர் வந்து கொண்டிருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டமானது உச்சநீதிமன்றம் அனுமதிக்கப்பட்ட அளவிலேயே உள்ளது. அதேபோல் மத்திய நீர் ஆணையத்தின் விதிகளின் படியும் உள்ளது.

அணையின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்றம் தொடர்பான தகவல்களைத் தொடர்ந்து முன்கூட்டியே எனக்குத் தெரிவிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். எனவே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பொறுத்தவரைத் தமிழக அரசு இரு மாநில மக்களின் நலனை, பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சரியான முடிவுகளை எடுக்கும் என்று உறுதி அளிக்கிறேன் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version