நான் செத்தாலும் இதை செய்யாதீங்க..தம்பிகளுக்கு சீமான் வேண்டுகோள்

நான் செத்தாலும் துரோகிகளுடன் சேர வேண்டாம் என, தொண்டர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான் அறிவுறுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் மாநில நிர்வாகி பேராசிரியர் கல்யாணசுந்தரம் மற்றும் ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் கட்சி தலைமைக்கு எதிராக செயல்படுவதால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி நிதி தொடர்பாக தலைமைக்கும், இவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பிரச்னை தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் பேசிய சீமான், கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி போன்றவர்களை சொந்த பிள்ளைகள் போன்றுதான் தட்டிக் கொடுத்து வளர்த்தோம். மேடைகளில் பேச, பேச ஊடக வெளிச்சம் கிடைத்ததும், அவர்களுக்கு தாங்கள் பெரிய தலைவர்கள் என்ற எண்ணம் வந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக கட்சியில் உள்ள கல்யாணசுந்தரம் போன்ற ஆட்கள் கட்சிக்கு வேலை செய்யாமல், கட்சிக்குள் தனக்கென வேலை செய்கிறார்கள். இதை தான் கல்யாணசுந்தரம் கடந்த நான்கு ஆண்டுகளாக செய்து வருகிறார் என குற்றம்சாட்டினார்.

தனக்கு வேண்டப்பட்டவர்களை வைத்து கொண்டு எனக்கு எதிராக தொடர்ச்சியாக தரக்குறைவாக சமூக வலைதளங்களில் கல்யாண சுந்தரம் பதிவிட்டு வருவதாகவும், என்னை தரக்குறைவாக பேசுவதை அவர் ரசிப்பதாகவும் சீமான் கூறினார். கல்யாண சுந்தரம், ராஜீவ் காந்தி போன்றோருக்கு என் மீது பெரிய அபிமானம் கிடையாது.

எனது கட்சியில் இருப்பவர்கள் நான் வேண்டும் என்றால் என்னோடு பயணிக்கலாம், இல்லையென்றால் கல்யாண சுந்தரத்தோடு பயணிக்கலாம். இவர்கள் செய்தது போன்று ஒரு நயவஞ்சகத்தை ஒரு சூழ்ச்சி துரோகத்தை நான் எங்குமே பார்த்தது இல்லை.

எத்தனையோ பேரை எதிர்த்து அரசியல் செய்திருக்கிறேன், சிறைக்கு சென்றுள்ளேன். அப்போது கூட வேதனைபட்டதோ, துளிகூட கலங்கியதோ இல்லை. கல்யாண சுந்தரத்தை நீக்கினால் கட்சி இரண்டாகுமா என்றல் சீமான், நான் இறந்தாலும் கட்சி உடையாது.

ஒருவேளை நான் இறந்தால் கட்சியை கைபற்றிக் கொள்ளலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், நான் செத்தாலும் இவர்களோடு கட்சியினர் சேரக் கூடாது என கூறியுள்ளார்.

அதோடு, என் மரணம் எதிரிகளின் கைகளால் நடக்க வேண்டும். என் உடம்பில் ஒரு சின்ன கீறலை கூட என் துரோகிகள் கைகளால் ஏற்க நான் தயாராக இல்லை என்றும் சீமான் உணர்ச்சி வசமாக அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

Exit mobile version