முறைகேடான டெண்டர் அமைச்சர் பதவி விலகவேண்டும் – மு. க. ஸ்டாலின் அறிக்கை…

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வானூர் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சக்ரபாணியின் மகனுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் குவாரி குத்தகை அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் வட்டம், திருவக்கரையில் உள்ள கல்குவாரியை குத்தகைக்கு அளித்துள்ளது, அண்மையில் அந்தக் குவாரியில் நடைபெற்ற விபத்தின் மூலம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது. கடந்த 3-11-2020 அன்று எம்.எல்.ஏ. சக்ரபாணியின் மகன் பிரபுவின் பெயரில் உள்ள கல்குவாரியில் கோரவிபத்து நடைபெற்றுள்ளது.

அதில் ஆறுமுகம், ரங்கராவு ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஆறுமுகம் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது தொடர்பாக ஆறுமுகத்தின் மகன் அன்பழகன் கொடுத்த புகாரினைப் பெற்றுக்கொண்ட வானூர் காவல் நிலையத்தினர், “திருவக்கரை சக்ரபாணி மகன் பிரபு கல்குவாரியில்” என்று, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் மகனுடைய குவாரி என்பதை மறைத்துப் பதிவு செய்துள்ளார்கள். அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் மிரட்டல் காரணமாகவே இப்படி “திருவக்கரை பிரபு” என்று முதல் தகவல் அறிக்கை FIR போட்டிருக்கிறார்கள்.

பொது ஊழியர்கள் தங்களுக்கோ அல்லது தங்களுடைய உறவினர்களுக்கோ, அரசுப் பணிகளை டெண்டர் எடுக்கக்கூடாது. அரசின் காண்டிராக்டுகள் மற்றும் குத்தகைகளைப் பெறக்கூடாது என்பது எல்லோரும் இருக்கும் விதி. ஆனால் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் மகனுக்கே கல்குவாரி கொடுத்திருப்பதால் அமைச்சர் சி.வி.சண்முகம் ஊழல் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவராகிறார். ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சக்ரபாணி, தனது மகனுக்கே அரசு கல்குவாரியைக் குத்தகைக்குப் பெற்றிருப்பதால் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டியவராகிறார்.

அரசின் டெண்டர்கள், காண்டிராக்டுகள், குத்தகைகள் எல்லாம் அ.தி.மு.க. அமைச்சர்களும், முதல்-அமைச்சரும் இப்படி போட்டி போட்டுக்கொண்டு கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும், தங்கள் உறவினர்களுக்கும் அளித்து ஊழல் ஆட்சியை எந்த விதிமுறைகளுக்கும் கட்டுப்படாத ஒரு காட்டாட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி கொண்டிருக்கிறார். உறவினர்களுக்கு டெண்டர் கொடுப்பது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றம் என்பது தெரிந்தும் கூட தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. அமைச்சர்களும் அரசு கஜானாவைக் கொள்ளையடித்து வருவது ஆபத்தானதாகும்.

எனவே, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சக்ரபாணியின் மகனுக்கு அளிக்கப்பட்ட கல்குவாரி லைசென்சை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த லைசென்சு வழங்கிய துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்

Exit mobile version