சீமானை சீண்டுகிறதா துக்ளக் தர்பார்: விளக்கமளித்த பார்த்திபன்

துக்ளக் தர்பார் சர்ச்சை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் விளக்கம் அளித்துள்ளார் நடிகர் பார்த்திபன்.

விஜய் சேதுபதி, பார்த்திபன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் படத்தின் டீஸர் கடந்த 11ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்குப் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பார்த்திபன் பெயர் படத்தில் ராசிமான் என்றும், அவரது கட்சி’மக்கள் முற்போக்கு முன்னேற்ற கழகம்’ என்றும் இடம்பெற்றிருந்தது. அத்துடன், புலி இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும் என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.


ராசிமான் என்பதும், புலிப் பெயரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கேலியாக சித்தரிப்பதாக அக்கட்சியினர் துக்ளக் தர்பார் திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தினர்.


இந்த நிலையில் இந்தச் சர்ச்சை தொடர்பாக சீமானிடம் பேசியுள்ளார் பார்த்திபன். அதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில், நண்பர் சீமானிடம் நேரடியாக ‘துக்ளக் தர்பார்’ குறித்து விளக்கமளித்துவிட்டேன். அவரும் பெருந்தன்மையாகப் பதில் அளித்தார் எனக் குறிப்பிட்டார்.

read more: ஜீன்ஸ் பேண்ட், டி-ஷர்ட்: உதயநிதியுடன் ஜல்லிக்கட்டு பார்த்த ராகுல்


ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டுமென்று வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடம் தந்திருக்க மாட்டேன். இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல என்று விளக்கம் அளித்த பார்த்திபன்,இடையறாது உழைத்து தங்களின் லட்சிய இலக்கை அடையப் போராடும் ‘நாம் தமிழர்’ தோழர்களின் முயற்சிகளைக் கிண்டல் செய்ய நான் இடம் தரமாட்டேன் என்று குறிப்பிட்டார்.
உள்நோக்கமின்றி நடந்த பெயர் பிரச்சினையை இயக்குநரிடம் கூறி, ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருவதாகவும் ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்

Exit mobile version