டெல்லியில் காமராஜரை வீட்டோடு வைத்து கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் இப்போது வேசம் போடுகிறார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் அதிகம் ஜி.எஸ்.டி வரி செலுத்தக்கூடிய தொகுதியாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி உள்ளது. இங்கு சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும், என்றும் தொகுதி மக்களின் பிரச்சினைகளையும் மனுவாக ஊராட்சி தலைவர்களிடம் பெற்று ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உடன் இணைந்து முதலமைச்சர் இடம் கோரிக்கை மனுவாக கொடுத்துள்ளோம். முதலமைச்சர் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகிறேன் என உறுதியளித்துள்ளார் என்றார்.
தொடர்ந்து திருச்சி சிவா, காமராஜர் குறித்து பேசியது தொடர்பான கேள்விக்கு, காமராஜர் குறித்த விவாதம் முடிந்துவிட்டது அதற்கு நேற்று முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்றார். அப்போது திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும் என அண்ணாமலை கூறி உள்ளாரே என்ற கேள்விக்கு ஆடு நினைகிறதே என்று ஓநாய் நினைக்கிறது என்பது போன்று எங்களை பற்றி அண்ணாமலைக்கு ஏன் கவலை? காமராஜரை கொலை செய்ய முயற்சி செய்தது யார்? டெல்லியில் காமராஜரை வீட்டோடு வைத்து கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் அதற்குப் பிறகு காமராஜருக்கு பிறந்தநாள் விழா எடுப்பது போன்று வேசம் போடுகிறார்கள். பாஜக, ஆர்.எஸ்.எஸ் வேசத்தை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.