அதானியை அலறவிட்ட ஆஸ்திரேலியர்கள்.. அதானிக்கு கடன் வழங்காதே என்ற பதாகையுடன் கிரிக்கெட் மைதானத்திற்குள் இருவர்…

இந்தியா- ஆஸ்திரேலியா அணி மோதும் ஒருநாள் போட்டிக்கு நடுவே இருவர் மைதானத்திற்குள் அதானிக்கு கடன் வழங்காதே பதாகையுடன் நின்று போராட்டம் நடத்தினர்.

சிட்னி:

கொரோனா பரவல் தொற்றுக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்று சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இன்று இந்தியா- ஆஸ்திரேலியா அணிக்கு முதல் ஒரு நாள் போட்டியில் மோதி பலப்பரீட்சை நடத்தி வருகிறது.முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்தது.

இந்த போட்டியின் 7 வது ஓவரின்போது மைதானத்திற்குள் நுழைந்த இரண்டு ஆஸ்திரேலியர்கள் ‘அதானிக்கு 1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் கடன் வழங்காதே’ என்ற வாசகத்துடன் கூடிய பதாகையை கைகளில் ஏந்தி ஸ்டேட் பேங்கிற்கு கோரிக்கை வைத்தனர்.இதனால் மைதானத்திற்குள் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.அதன்பிறகு பாதுகாவலர்கள் அந்த 2 நபர்களையும் வெளியேற்றிய பின்பு போட்டி தொடர்ந்து நடைபெற்றது.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து என்னும் பகுதியில் அதானி குழுமம் நிலக்கரி சுரங்கம் அமைக்க திட்டமிட்டு அதற்கான ஒப்புதலையும் ஆஸ்திரேலிய அரசிடம் வாங்கியது.இந்த திட்டத்திற்காக ஸ்டேட் பேங்கானது 1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலரை அதானி குழுமத்திற்கு கடனாக வழங்கவுள்ளது. இந்த நிலக்கரி திட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து நடந்துவரும் சூழலில் ,அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், போராட்டக்காரர்கள் கிரிக்கெட் போட்டியிலும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

Exit mobile version