உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார் கிடாம்பி ஸ்ரீகாந்த்!

ஸ்பெயினில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் வெல்வா நகரில் 26 வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்த நிலையில்,நேற்று முன்தினம் நடைபெற்ற பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்,சக நாட்டு வீரரான லக்‌ஷயா சென்னுடன் மோதினார்.

முதல் செட்டை இழந்த ஸ்ரீகாந்த்,அதன்பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை தனது வசப்படுத்தினார்.போட்டியின் இறுதியில் ஸ்ரீகாந்த் 17-21, 21-14, 21-17 என்ற செட் கணக்கில் லக்‌ஷயா சென்னை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதன்மூலம்,உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் முதல் முறையாக நுழைந்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்று ஸ்ரீகாந்த் பெற்றார். இதன்மூலம்,இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில்,உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்,சிங்கப்பூரின் லோ கீன் யூவுடன் நேற்று மோதினார்.

இப்போட்டியின் இறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 15-21, 20-22 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் லோ கீன் யூவிடம் போராடி தோல்வியடைந்தார். இதனால்,கீன் யூ தங்கப்பதக்கம் வென்ற நிலையில்,கிடாம்பிக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது.

இதன்மூலம்,உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Exit mobile version