அடையாறின் ஆலமரம் சாய்ந்தது – சாதனை மனுஷி சாந்தா

அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் 65 ஆண்டுகள் சேவை செய்து மறைந்த மருத்துவர் சாந்தாவின் மறைவு மருத்துவ உலகுக்கு பெரும் இழப்பு. அவரது வாழ்க்கை வரலாறு இதோ.

சென்னை மயிலாப்பூரில் 1927-ம் ஆண்டு பிறந்த சாந்தா, புகழ்பெற்ற வி்ஞ்ஞானி சர்.சி.வி. ராமனின் குடும்ப வழித்தோன்றல் ஆவார். சாந்தாவின் தாத்தாவுடைய சகோதரர்தான் சர்.சி.வி. ராமன். அறிவியல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற டாக்டர் எஸ்.சந்திரசேகர் இவரது தாய்மாமன். அவர்கள் வழியில் சாந்தாவும் இயற்பியல் துறையில் சாதிக்க வேண்டும் என குடும்பத்தினர் விரும்ப,  மருத்துவத்தில் சாதனை படைக்க வேண்டும் என எண்ணினார் சாந்தா.

மயிலாப்பூர் பி.எஸ். சிவசாமி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பப் படிப்பை தொடங்கிய சாந்தா, 1949-இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பட்டம் பெற்றார். 1955-ம் ஆண்டில் எம்.டி எனப்படும் முதுநிலை மருத்துவர் பட்டத்தையும் பெற்றார். நாட்டின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியால் சென்னை அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில், 1955-ம் ஆண்டில் தன்னையும் ஓர் அங்கமாக சேர்த்துக்கொண்ட சாந்தா,

பின்னர் அந்த மருத்துவமனையை உலகத் தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றியதில் பெரும் பங்காற்றினார்.அந்தக் காலக்கட்டத்தில் புற்றுநோயை குணப்படுத்த முடியாது. புற்றுநோய் என்றாலே இறந்துவிடுவார்கள் என்ற அச்சம் படித்தவர்களுக்கும் இருந்தது. அதையெல்லாம் களைந்து, புற்று நோயை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கிய பெருமைக்குரியது அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையம். 12 பேருடன் செயல்பட்ட மருத்துவமனையை விரிவுபடுத்தியதில் மருத்துவர் சாந்தாவுக்கு முக்கிய பங்கு உண்டு.

65 ஆண்டுகளாக அடையாறு மருத்துவமனையில் சேவை புரிந்த சாந்தா, 1984 முதல் இறக்கும் வரை அதன் தலைவராக இருந்து வந்தார். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த சாந்தா, இந்திய வேளாண் ஆய்வுக்கழக குழு உறுப்பினர், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர், இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

அவரது சேவையை பாராட்டி மகசேசே, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விருதுகள் மூலம் கிடைத்த பணம் அனைத்தையும் மருத்துவமனை வளர்ச்சிக்கே செலவு செய்த சாந்தா, தள்ளாத வயதிலும் தளாரமல் மருத்துவ சேவை ெசய்து மறைந்துள்ளார். அனைவரின் கண்ணீர் அஞ்சலிக்கு இடையே டாக்டர் சாந்தாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அணிவகுத்து நின்ற 24 போலீசார் துப்பாக்கியை தாழ்த்தி மீண்டும் மரியாதை செலுத்தினர். பின்னர் 24 போலீசார் அரசு மரியாதை செலுத்தும் வகையில் வானை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட, 72 குண்டுகள் முழங்க டாக்டர் சாந்தாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Exit mobile version