கூவம், அடையாறு கரையோரங்களில் வசிக்கும் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை:
கூவம், அடையாறு கரையோரங்களில் வசிக்கும் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளநிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று பல்வேறு துறை அதிகாரிகளிடம் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். பின்னர், இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் தேக்கம் அடையக்கூடிய இடங்களாக 2015-ம் ஆண்டு 306 இடங்கள், 2017-ம் ஆண்டு 205 இடங்கள், 2018-ம் ஆண்டு 53 இடங்கள், 2019-ம் ஆண்டு 19 இடங்கள் எனக் கண்டறியப்பட்டு, தற்பொழுது நீர்த்தேக்கம் 3-க்கும் குறைவான இடங்களில் மட்டுமே உள்ளது.
கூவம், அடையாறு கரையோரம்:
சென்னையில் கடந்த செப். 30 வரை பருவமழை 445.7 மி.மீ. பெய்துள்ளது. 210 நீர்நிலைகளில் தூர்வாருதல் மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 133 நீர்நிலைகள் தூர்வாரி புனரமைக்கப்பட்டுள்ளன. 50 நீர்நிலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 27 நீர்நிலைகளில் பணிகள் தொடங்கும் நிலையில் உள்ளன.
கூவம், அடையாறு மற்றும் கால்வாய் கரையோரங்களில் வசிக்கும் 17,768 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். பருவமழைக் காலங்களில் மழைநீர் வடிகால்களில் தண்ணீர் தங்கு தடையின்றிச் செல்லும் வகையில் ரூ.15 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 48 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வரத்துக் கால்வாய்கள் ரொபோடிக் எக்ஸவேட்டர், மினி ஆம்பிபியன் வாகனங்கள் கொண்டு தூர்வாரப்படுகின்றன.
சுரங்கப்பாதை:
மேலும், பருவமழைக் காலங்களில் 24 x 7 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை 75 பணியாளர்களுடன் இயங்கி வருகிறது. 60 உயர்திறன் கொண்ட பம்பு செட்டுகள் அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டு எளிதான போக்குவரத்திற்கு வழி செய்யப்பட்டுள்ளது.
இரண்டு வாகனங்களுடன் பொருத்தப்பட்ட மர அறுவை இயந்திரங்கள், 160 டீசல் மற்றும் பெட்ரோல் மூலம் இயங்கும் மர அறுவை இயந்திரங்கள், 11 மின்சாரம் மூலம் இயங்கும் மர அறுவை இயந்திரங்கள் அந்தந்த மண்டலங்களில் தயார் நிலையில் உள்ளன.
மோட்டார்கள்:
தாழ்வான இடங்களில் 5 எச்.பி மற்றும் 7.5 எச்.பி திறன் கொண்ட 458 எண்ணிக்கையிலான மோட்டார் பம்புகள், 1,500 நபர்களுக்கு உணவு தயார் செய்ய பொது சமையலறை மற்றும் அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு தயாரித்து வழங்கும் வகையிலும் தயார் நிலையில் உள்ளன.
பருவமழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னை மாநகராட்சி மற்றும் தொடர்புடைய அலுவலகங்கள் வாயிலாக முறையான தகவல்கள் அவ்வப்பொழுது பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும். சேவைத்துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பருவமழைக்கு முன்னதாக முடிக்க வேண்டும் பருவமழை நெருங்கும் நேரத்தில் சாலை வெட்டு மேற்கொள்ள அனுமதி கண்டிப்பாக வழங்கப்படாது.
இவ்வாறு அவர் பேசினார்.