திருமாவளவனுக்கு எதிரான வழக்கு வாபஸ்:வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மனுஸ்மிருதி பற்றி பேசி நாட்டில் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சிக்கும் சிதம்பரம் தொகுதி எம்பி, திருமாவளவனை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் ஐரோப்பிய யூனியன் பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஒரு காணொளி கருத்தரங்கில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனுஸ்மிருதியை மேற்கோள்காட்டி, பெண்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், மனுஸ்மிருதியை தடைசெய்ய கோரி திருமாவளவன் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்.

தனது சொந்த அரசியல் லாபத்துக்காக, இந்துக்களை அவமதித்ததுடன், சமூகத்தில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி, நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட திருமாவளவன் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்படி, நாடாளுமன்ற செயலாளருக்கு உத்தரவிட கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் காசி ராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், 2,200 ஆண்டுகளுக்கு முன் எழுதிய மனுஸ்மிருதி குறித்து விளக்கமளிக்க, திருமாவளவன் சமஸ்கிருதத்தில் பண்டிதர் அல்ல என்றும் அவர் அளித்துள்ள விளக்கம் தவறானது எனவும், இதுபோன்ற தேவையற்ற விளக்கங்களை அவர் அளித்திருக்க கூடாது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சர்ச்சை பேச்சு காரணமாக அமைதியற்ற சூழல் உருவாகியுள்ள போதும், அவர் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பேசி வருவதாகவும், இதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகக் கூறி அவர் எடுத்துக் கொண்ட, பதவிப் பிரமாண உறுதிமொழியை மீறியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பதவிப் பிரமாண உறுதி மொழியை மீறிய திருமாவளவன் மீது நடபடிக்கை எடுக்க கோரி நாடாளுமன்ற செயலாளருக்கு அக்டோபர் 27ல் மனு அளித்ததாகவும், அதை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும், குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிராக செயல்பட்டு, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், அரசியல் பிரச்னைகளுக்கு தீர்வு காண நீதிமன்றத்தை பயன்படுத்த கூடாது எனக் கூறிய நீதிபதிகள், மனுஸ்மிரிதி சட்ட புத்தகமும் இல்லை எனவும், மனுஸ்மிரிதி மொழி பெயர்ப்பு சரியா? தவறா என்பதும் தெரியாது எனவும் குறிப்பிட்டார்.

எந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விளக்கமளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.இக்கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற்று விரிவான மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தினார்.இதை மனுதாரர் தரப்பு ஏற்றுக் கொண்டதை அடுத்து, மனுவை வாபஸ் பெற அனுமதித்த நீதிபதிகள், உரிய அரசியல் சட்ட பிரிவுகளை குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்ய அனுமதித்தனர்.

மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Exit mobile version