
சென்னையின் முக்கிய சாலையில் ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை சி.சி.டி.வி காட்சிகள் கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
சென்னை காவல்துறை ஏற்கனவே விடுத்துள்ள அறிவிப்பில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களில் சென்றாலோ அல்லது சாகசத்தில் ஈடுபட்டாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதையொட்டி மாநகரில் விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டுவோர் மீது காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். இதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் அந்த நபர் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோ வைரலானதை அடுத்து, காவல்துறையினர் கவனத்துக்கு வந்தது.
அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகள் கொண்டு பைக் சாகசத்தில் ஈடுபட்ட நபர் பூவிருந்தவல்லியைச் சேர்ந்த ஆஷிக் உசேன் என்கிற இளைஞர் என்று அடையாளம் தெரிந்தது. அவரை கைது செய்த காவல்துறை, அவர் பயன்படுத்தி வந்த ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்கையும் பறிமுதல் செய்தது.
தன்னுடைய இன்ஸ்டா கணக்கில் ஆஷிக் உசேன் பதிவு செய்திருந்த பைக் சாகச வீடியோக்களையும் அவர்கள் நீக்கினர். விதிகளை மீறி பைக் பயணங்களை மேற்கொள்பவர்கள் மீது காவல்துறை கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
