விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த மெகந்தி மிஸ். கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார்.
விழுப்புரம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா உலகளவில் பிரசித்திப் பெற்ற ஒன்று. உலகளவில் வாழும் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநங்கைகள் பலர் இந்நிகழ்வில் பங்கேற்பது, இந்த திருவிழாவின் சிறப்பம்சமாக உள்ளது.
திருவிழா நடைபெறுவதற்கு முன்னதாக பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதன்படி நடக்கும் மிஸ். கூவாகம் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக உள்ளது. இந்தாண்டும் வெகு விமர்சையாக மிஸ். கூவாகம் நிகழ்ச்சி நடந்தது.
மொத்தம் 50 திருநங்கைகள் வண்ண வண்ண உடை மற்றும் அசத்தலான அலங்காரங்களுடன் மேடையில் தோன்றினர். 3 சுற்றுகளின் முடிவில் சென்னையைச் சேர்ந்த திருநங்கை மெகந்தி மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார்.
அவரை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சூரி இரண்டாம் இடத்தையும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வீட்டி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, கிரீடம் சூட்டப்பட்டது.