ஆனித் திருமஞ்சன விழாவிற்கு தயாராகிறது சிதம்பரம் நடராஜர் கோவில்

தமிழகத்தில் உலக புகழ்பெற்ற ஒரு சிவன் கோவில் என்றால் அது சிதம்பரம் நடராஜர் திருக்கோவில் தான். இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம், மற்றும் ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும் எப்பொழுதுமே வெகு விமரிசையாக நடைபெறும். இந்த 2 விழாக்களின் போதும் மட்டும் மூலவர் நடராஜர் மற்றும் சிவகாம சுந்தரி சுவாமிகள் வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஆனித் திருமஞ்சன தரிசன விழாவானது நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. 10 நாட்களாக நடைபெறும் இந்த விழாவில் தினசரி காலை, மாலையில் பஞ்சமூர்த்திகள் இணைந்த வீதிஉலாவானது நடைபெறும். விழாவின் 5-வதுநாளில் தெருவடைச்சான் உற்சவம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வருகிற 25-ம் தேதியன்று நடைபெறுகிறது. ஆனித் திருமஞ்சன தரிசன விழா வரும் 26-ம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. பின்னர் 10 மணியளவில் சித் சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், சித்சபை பிரவேசமும் நடக்கிறது. 28-ம் தேதி இரவு முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது என‌ சிதம்பரம் கோவில் நிர்வாக குழு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version