தேசிய திறனாய்வு தேர்வுக்கு 10-ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் : அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

தேசிய திறனாய்வு தேர்வுக்கு 10-ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
Exam Hall

தேசிய திறனாய்வு தேர்வு

பள்ளிகளில் 10-ஆம் வகுப்புப் படிக்கும் மாணவர்களில் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களின் மேற்படிப்புக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நோக்கில் ஆண்டுதோறும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. என்.சி.இ.ஆர்.டி. நடத்தும் இந்தத் தேர்வானது 2 நிலைகளை உள்ளடக்கியது. முதல்கட்டத் தேர்வு மாநில அளவிலும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு 2-வது கட்டமாகத் தேசிய அளவிலும் தேர்வு நடைபெறும்.

மாதந்தோறும் உதவித்தொகை

தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வு மூலம் மொத்தம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும்போது மாதம்தோறும் ரூ.1,250-ம், அதன்பிறகு இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு படிக்கும்போது, மாதம்தோறும் ரூ.2,000-ம் வழங்கப்படும். மேலும், பி.எச்டி. படிப்புக்கும் உதவித்தொகை பெறலாம்.

விண்ணப்பம்

இந்த நிலையில், 2020- 2021-ஆம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கு 10-ஆம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள், தங்களின் விண்ணப்பங்களை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து, கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

கால அவகாசம் கிடையாது

விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட மாட்டாது என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version