11-ஆம் வகுப்பு மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் – அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

11-ஆம் வகுப்பு மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

மார்ச் 2020, மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள், 26-ஆம் தேதி (நாளை) பிற்பகல் 3 மணி முதல் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று, தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்தப் பிறகு மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் “Application for Retotalling/ Revaluation” என்ற தலைப்பினை டைப் செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இவ்விண்ணப்பப் படிவத்தினை, பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து, வரும் 31.08.2020 காலை 10 மணி முதல் 02.09.2020 மாலை 5 மணிக்குள், தேர்வர் தங்களுக்கு அருகிலுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். மறுமதிப்பீடு பாடம் (ஒவ்வொன்றிற்கும்) – ரூ.505, மறுகூட்டல்-II உயிரியல் பாடம் மட்டும் – ரூ.305/-ஏனையப் பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) – ரூ.205 செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version