ஃபீரி பயர் விளையாட்டில் கடன்: நண்பர்களுக்கு பயந்து வீட்டை விட்டு ஓடிய சிறுவன்

ஆன்லைன் விளையாட்டில் 4,500 பாயிண்டுகள் கடன் வாங்கியதால், நண்பர்களுக்கு பயந்து சிறுவன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகேயுள்ள தான்தோன்றிமலை, சத்திய மூர்த்தி நகரில் வசித்து வருபவரின் 15 வயதில் மகனே வீட்டை விட்டு ஓடியிருக்கிறார். ஆன்லைன் வகுப்புக்காக அந்த சிறுவனுக்கு பெற்றோர் ஆண்ட்ராயிடு செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். வகுப்புகள் போக மீதி நேரத்தில் அந்த சிறுவன் ஃபீரி பயர் கேம் விளையாடுவது வழக்கம். அந்த விளையாட்டில் மற்ற நண்பர்களிடம் இருந்து புள்ளிகளை கடன் வாங்கி விளையாடலாம். தன்னுடன் விளையாடும் சக சிறுவர்களிடம் பாயிண்ட்களை கடன் பெற்று விளையாடியும், அவற்றை திரும்ப செலுத்துவதையும் வாடிக்கையாக வைத்திருந்துள்ளான் அந்த சிறுவன்.

இந்தநிலையில் அதிக நேரம் விளையாட்டில் செலவிட்டதால் செல்போனை வாங்கி வைத்துள்ளனர் சிறுவனின் பெற்றோர். இதனால் 4500 பாயிண்ட்டுகளை கடன் கொடுத்த சிறுவர்கள் தொல்லை தர ஆரம்பித்துள்ளனர். வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் கூறிவிடுவோம் என்று மிரட்டியதால் இதற்கு பயந்து வீட்டை விட்டு ஓடியிருக்கிறான் சிறுவன். செல்போனில் கேமராவை ஆன் செய்து, ‘அம்மா உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும், நான் உன்னை விட்டு செல்கிறேன் என்னைத் தேட வேண்டாம்’ என வீடியோ ரெக்கார்ட் செய்து வைத்து வீட்டு ரூ. 100 பணத்தை எடுத்துக் கொண்டு கடந்த 6- ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.

திருச்சி மலைக்கோட்டை அருகே சுற்றித் திரிந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பின்னர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் இருந்த கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் மீட்டு பெற்றோரிடத்தில் ஒப்படைத்தனர். சிறுவனுக்கு மனநல சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சிறுவனை மிரட்டிய அவனின் 3 நண்பர்களை தாந்தோன்றிமலை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Exit mobile version