கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்து படுகாயமடைந்த ஒன்றரை வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் தனது மனைவி ஷாலினியுடன் பால் நல்லூர் என்கிற கிராமத்தில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பவிஸ்கா என்கிற பெண் குழந்தை இருந்தது.
கடந்த 7-ம் தேதி பக்கத்துவீட்டில் குழந்தை பவிஸ்கா விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அந்த வீட்டில் பலகாரம் சுட்டுவிட்டு , கொதிக்கும் எண்ணெயுடன் வடசட்டி தனியாக எடுத்து வைக்கப்பட்டு இருந்தது.
வீட்டில் இருப்போர் அதை கவனிக்காமல் இருந்தபோது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பவிஸ்கா எண்ணெய்குள் தவறி விழுந்தது. இதில் தொடை பகுதியில் குழந்தைக்கு படுகாயமடைந்தது.
உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை பவிஸ்கா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த குழந்தை நேற்று உயிரிழந்தாள்.
இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துரையினர், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.