பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்லலாம்…. இவர்களுக்கு மட்டும் அனுமதி!

தமிழக அரசுப்பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்களின் உபகரணங்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசுப்போக்குவரத்து கழக நெல்லை கோட்ட நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நாட்டுப்புறக் கலைஞர்கள் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 50% பயண கட்டண சலுகையுடன் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களை கட்டணம் இல்லாமல் எடுத்துச் செல்ல அனுமதிக்க கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டுப்புற கலைஞர்கள் அரசு பேருந்துகளில் தொழில் முறையாக பயணம் செய்யும் போது 50% பயணக் கட்டண சலுகை பெறலாம். அவர்கள் எடுத்து வரும் இசைக்கருவிகள், தொழில் கருவிகளை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

அதன்படி, தப்பாட்டம், மாடு,மயில், கரக ஆட்டங்கள், பொய்க்கால் குதிரை, கொல்லி கட்டை, நையாண்டி மேளம், நாதஸ்வரம், பம்பை, உடுக்கை, உருமி, ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், தவில் மற்றும் சிறிய கருவிகளை எடுத்துச் செல்லலாம். இந்த விபரங்களை வழிப்பட்டியலுடன் இணைத்து நடத்துநர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், இந்த இலவச பயணத்தை மதுரை, கும்பகோணம், கோவை, சென்னை, விழுப்புரம்,சேலம், கோட்ட பேருந்துகளில்  அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் நாட்டுப்புற கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version