ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்துவதில் இருதரப்பினரிடையே பிரச்னை எழுந்ததை அடுத்து, காவல்நிலையத்தில் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசலை யார் நிர்வகிப்பது என்பது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்னை இருந்து வருகிறது. இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை அடுத்து, வக்புவாரியம் அவர்களில் ஒரு தரப்பினருக்கு ரமலான் சிறப்பு தொழுகையை நடத்த அனுமதி வழங்கியது.
அதையடுத்து கடந்த 2-ம் தேதி அவர்கள் ஜமாத்தில் வைத்து சிறப்பு தொழுகை நடத்தினர். அவர்களில் மற்றொரு தரப்பினர் இன்று சிறப்பு தொழுகை நடத்த முடிவு செய்தனர். எனினும் பிரச்னை ஏற்பட்டுவிடக்கூடாது என்று எண்ணி, காவல்துறையினர் காவல்நிலையத்துக்கு அழைத்து இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரண்டு தரப்புகளில் இருந்து முக்கியமானவர்கள் மட்டுமே காவல் நிலையத்துக்கு உள்ளே பேச்சுவார்த்தையில் இருந்தனர். மற்றவர்கள் ஒன்றாக காவல்நிலையத்துக்கு வெளியே நின்றிருந்தனர். பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த சமயத்தில் வெளியில் இருந்த ஆட்களிடையே பிரச்னை உருவானது.
கைகலப்பு உருவாகி ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு காவலர்கள் மோதலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் செய்து வைத்தனர். அதற்குள் சிலர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட துவங்கினர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த கன்னியாகுமரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா, மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து பிரச்னை செய்தவர்கள் மறியலை கைவிட்டு வீட்டுக்கு கலைந்து செய்தனர்.