உயிருக்கு ஆபத்தான நிலையில் பிறந்த குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு தாய் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த 16-ம் தேதி வந்த பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. மிகவும் எடைக் குறைவாக குழந்தை இருந்ததால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையின் சார்பில் பச்சிளம் குழந்தை பாதுகாப்பு வார்டில் வைத்து குழந்தையை மருத்துவப் பணியாளர்கள் பராமரித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 22-ம் தேதி முதல் குழந்தையின் தாய் காணாமல் போயுள்ளார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தலைமறைவான பெண்ணின் பெயர் ஐஸ்வர்யா என்பது, அவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும் இன்னும் திருமணமாகாத நிலையில், குழந்தை பிறந்ததால் அவர் மருத்துவமனை விட்டுவிட்டு தப்பியோடியதும் தெரிந்தது. இதையடுத்து காணாமல் போன குழந்தையின் தாய் ஐஸ்வர்யாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.