விவசாயத்திற்கு பயன்படும் நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு திண்டுக்கல் பட்டதாரி அசத்தல்!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பிஎட் பட்டதாரி ஒருவர் தன் சொந்த முயற்சியில் விவசாய இயந்திரங்கள் செய்து அசத்தி வருகிறார். பெரிய ஜேசிபி இயந்திரம் செய்யும் பணிகள் அனைத்தையும் செய்யும் சிறிய அளவிலான இயந்திரத்தை அண்மையில் ஒரு லட்சம் ரூபாய் செலவில் அவர் வடிவமைத்துள்ளார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திண்டுக்கல் அருகே குட்டத்து பட்டியைச் சேர்ந்தவர் தாமஸ். பிஎட் பட்டதாரியான இவர் ஜேசிபி இயந்திரத்தின் உதிரிபாகங்கள் மற்றும் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அதோடு கடந்த 18 வருடங்களாக ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் கார் பழுது பார்க்கும் வேலையும் செய்து வருகிறார். திண்டுக்கல் வட்டாரத்தில் ஜேசிபி இயந்திரம் பழுது பார்ப்பதில் தாமஸ் பிரபலம். மேலும் கார்களில் பல்வேறு விதமான மாற்றங்கள் செய்து தருவதையும் இவர் செய்து வருகிறார். தற்போது கொரோனா காலமென்பதால் கடையும் திறக்க முடியாமல் ஜேசிபி இயந்திரங்கள் பழுது பார்க்கும் பணியும் செய்ய முடியாமல் முடங்கிப் போய் கிடந்தார் தாமஸ். அப்போதுதான் வேலை இல்லாமல் சும்மா இருக்கும் இந்த காலத்தை வீணாகக் கழிக்காமல் ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்துள்ளார் தாமஸ். அவரின் இந்த யோசனைக்கு கைகொடுத்தது அவரின் 18 வருட இயந்திரம் ஜேசிபி இயந்திரம் பழுது பார்க்கும் அனுபவம். இதுவரை தான் கற்றிருந்த அனுபவத்தை பயன்படுத்தி ஏதாவது விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் கண்டுபிடிக்க வேண்டுமென்று களமிறங்கினார்.

அப்போது பல லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் ஜேசிபி இயந்திரத்தை பழுது பார்க்கும் தான் அந்த இயந்திரம் செய்யும் அனைத்துப் பணிகளையும் செய்யும் வகையில் ஒரு சிறிய இயந்திரத்தை வடிவமைத்தால் என்ன என கேள்வி எழுந்தது தாமசுக்கு. இதையடுத்து தன் சிந்தனையைச் செயலாக்க விரும்பினார் தாமஸ். தன்னிடம் பணிபுரியும் அனுபவமிக்க பணியாளர்களை கொண்டு அதற்கான வேலையை தொடங்கினார். தன் வீடு அருகில்தான் அமைத்துள்ள ஒர்க்ஷாப்பில் தானே பொருட்களை வடிவமைக்கத் தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக தாமசின் கனவு நனவாகியது. அப்படி உருவாக்கப்பட்டதுதான் இந்த இயந்திரம்.
பார்ப்பதற்கு ஜேசிபி இயந்திரம் போலவே இருக்கும் இந்த மினியேச்சர், ஜேசிபி இயந்திரம் செய்யும் அனைத்து பணிகளையும் செய்கிறது. குறிப்பாக விவசாய பணிகளில் அதிக அளவில் இந்த இயந்திரத்தை ஈடுபடுத்த முடியும் என்கிறார் தாமஸ்.

செலவோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஜேசிபி இயந்திரத்தை வாடகைக்கு எடுத்தால் ஒரு மணி நேரத்திற்கு 600 முதல் 700 ரூபாய் வரை கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் தாமஸ் தயாரித்திருக்கும் இந்த இயந்திரத்தை ஒரு மணி நேரம் இயக்குவதற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் மட்டுமே செலவாகும் என்று கூறி நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார் தாமஸ். விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் சிறு விவசாயிகள் அல்லாடி வரும் நிலையில் பல லட்சம் செலவு செய்து பெரிய இயந்திரங்கள் வாங்கி வைக்க முடியாமல் தவித்து வரும் விவசாயிகளுக்கு தாமஸின் இந்த கண்டுபிடிப்பு ஒரு வரப்பிரசாதம். இதுபோன்ற கண்டுபிடிப்புகளை அரசு அங்கீகரித்து, ஊக்குவிப்பதோடு இதை முறைப்படுத்தினால் தமிழகத்தில் சிறு விவசாயிகளும் நவீன வேளாண் இயந்திரங்களை கொண்டு விவசாய பணிகளை செவ்வனே செய்ய முடியும்

சுரா-

Exit mobile version