தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

ரூ.947.46 கோடியில் நான்கு வழிச்சாலைத் திட்டம்; விபத்து அதிகம் நடைபெறும் பகுதிகள், தொழில் வழித்தடங்களுக்கு முன்னுரிமை — அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

தமிழகம் முழுவதும் சாலை வசதிகளை மேம்படுத்தும் வகையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்வைத்த 182 சாலை மற்றும் புறவழிச்சாலை கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். மேலும், ரூ.947.46 கோடி மதிப்பிலான நான்கு வழிச்சாலைத் திட்டத்தையும் அவர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற வினா–விடை நேரத்தில் உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் நிலவும் சாலை மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் குறித்து கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்குப் பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து விளக்கினார்.

இன்னும் இருவழி, ஒருவழிச் சாலைகள் அதிகம்

தமிழகத்தின் பல பகுதிகளில், குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்னும் இருவழி மற்றும் ஒருவழிச் சாலைகள் அதிகளவில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சாலைகளின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு அவற்றை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

தேசிய நெடுஞ்சாலையுடன் ஊரகச் சாலைகள் இணையும் இடங்களில் விபத்து

சாலை விபத்துகள் தொடர்பாகவும் அமைச்சர் முக்கியமான தகவலை சட்டப்பேரவையில் தெரிவித்தார். தேசிய நெடுஞ்சாலைகளுடன் ஊரகச் சாலைகள் இணையும் பகுதிகளில் அதிக விபத்துகள் நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற அதிக விபத்து அபாயம் கொண்ட பகுதிகளை அடையாளம் கண்டு, சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட உள்ளன.

182 எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகள்

சட்டப்பேரவை உறுப்பினர்களிடமிருந்து சாலை மற்றும் புறவழிச்சாலை வசதிகள் தொடர்பாக 182 கோரிக்கைகள் அரசுக்கு வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தக் கோரிக்கைகளை ஒரே நேரத்தில் அறிவிப்புகளாக மட்டும் விட்டுவிடாமல், அவற்றின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

குறிப்பாக தொழிற்சாலைகள் அதிகம் உள்ள வழித்தடங்கள் மற்றும் விபத்து அபாயம் அதிகமுள்ள பகுதிகளுக்கான திட்ட அறிக்கைப் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.947.46 கோடியில் நான்கு வழிச்சாலை

இதனிடையே ரூ.947.46 கோடி மதிப்பீட்டிலான நான்கு வழிச்சாலைத் திட்டம் குறித்தும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ் சாலை கட்டமைப்பை மேம்படுத்தி, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன் பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்வது இலக்காகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலாற்றின் குறுக்கே உயர்மட்டச் சாலை?

சட்டப்பேரவையில் பாலாற்றின் குறுக்கே உயர்மட்டச் சாலை அமைப்பது தொடர்பாக உறுப்பினர் தென்றல் குமார் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பாலாற்றின் குறுக்கே உயர்மட்டச் சாலை அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்தார்.

ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் முன்வைத்தார்.

சென்னை–கன்னியாகுமரி 8 வழிச்சாலை தனித் திட்டம்

இதற்கிடையே சென்னை முதல் கன்னியாகுமரி வரை 8 வழிச்சாலை அமைக்கும் திட்டம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். தாம்பரம்–செங்கல்பட்டு போக்குவரத்து நெரிசல் தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது இந்தத் திட்டத்தை அவர் குறிப்பிட்டிருந்தார்

Exit mobile version