இணைய வழி வகுப்புகளில் மாணவர்களை பங்கேற்க நிர்பந்திக்க கூடாது என்றும், இணைய வகுப்புகளுக்கான வருகைப்பதிவு கட்டாயமில்லை என்றும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை:
இணையவழி வகுப்புகள்
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கல்வி நிறுவனங்கள் இணைய வழி மூலமாக வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், செல்போன் இல்லாததது, இணைய தொடர்பு இன்மை, பாடங்கள் புரியாத காரணத்தால் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை ஆணையர் இன்று இணைய வழி வகுப்புகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
உடல்நலம்
ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபடும் முன்பு மாணவர்களுக்குத் தேவையான உணர்ச்சிகரமான ஆதரவை வழங்கி உதவ வேண்டும். தொற்றுநோய்த் தடுப்புக்கான ஆரோக்கியமான நடைமுறைகள் மற்றும் சரியான ஊட்டச்சத்து உணவுகள் பற்றியும் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும். மாணவர்களுடன் ஆரோக்கியமான தொடர்பினை ஏற்படுத்திய பின்னரே கற்பித்தலை தொடங்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுடன் தனித்துவமான பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதலை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் பற்றியும் இணையவழிக் கற்றலில், ஈடுபடுதலில் உள்ள தடைகளை எவ்வாறு அகற்றுவது என்பது பற்றியும் பாதுகாப்பான இணையவழிக் கற்றல் குறித்து மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
மாணவர்களின் உடல் நலத்தினை உறுதி செய்யும் பொருட்டு அவர்கள் தங்கள் உடலை சீரான இடைவெளியில் நீட்டவும், அடிக்கடி கண்களைச் சிமிட்டவும், மின்னணு உபகரணங்கள் சாதனங்களை வசதியான நிலையில் வைத்திருக்கவும், வகுப்புகளின்போது குடிநீரை வைத்திருக்கவும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
வருகைப்பதிவு கட்டாயமில்லை
மாணவர்களுக்குக் குடும்பத்தில் குறிப்பிட்ட மன உளைச்சல்கள் அல்லாது இருப்பினும் அவர்கள் சக மாணவர்களை நேருக்கு நேர் தொடர்புகொள்ள இயலாது வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது, பெற்றோரை மன அழுத்தத்தில் பார்ப்பது போன்ற கவலைகளில் இருந்து மாணவர்களைப் புதிய கற்பித்தல் பயன்முறை நோக்கித் திருப்ப மேற்கூறிய அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையவழி வகுப்புகளில் வருகை கட்டாயமில்லை. இணையவழி வகுப்புகளில் வருகை, செயல்திறன் மதிப்பீடு நோக்கங்களுக்காக கட்டாயமாகக் காணப்படாது.
பள்ளிகள் திறக்கப்படும்போது இணையவழி அமர்வுகளுக்கு வருகை புரியாத மாணவர்களும் இணையவழி வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு இணையாகப் பாடங்களில் பயிற்சி வழங்குவதற்கு ஆசிரியர்கள் பொறுப்பேற்று தேவைக்கேற்றவாறு கூடுதல் வகுப்புகளை நடத்தி உறுதிப்படுத்த வேண்டும்.
நிர்பந்திக்க கூடாது
மின்னணு முறைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் மூலம் குழந்தைகளுக்கு தொலைவில் இருந்து அனுப்பப்படும் நிர்ணயிக்கப்பட்ட பணிகள் மற்றும் மதிப்பீடுகள் ஏதும் இறுதி தரம்/ மதிப்பெண்கள்/செயல்திறன்/ மதிப்பீடு போன்றவற்றைக் கணக்கிட கட்டாயமாக்கப்படாது. குழந்தைகள் இணையவழி வகுப்புகளில் அவர்களின் தனிப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கலந்துகொள்ள முழுமையான இணையப் பாதுகாப்பு அரணுடன் கூடிய கற்றல் மேலாண்மை அமைப்புகள் மற்றும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளி/ பள்ளி அமைப்புகளுக்கு தேவையான சாதனங்கள் மற்றும் இணைப்பு வசதிகள் உருவாகும் வரை குழந்தைகள் இணைய வகுப்புகளில் பங்கு பெறுகிறார்களா? இல்லையா என்பதை முடிவு எடுப்பதற்கு பெற்றோர்கள், பாதுகாவலர்களுக்கு, குழந்தைகளுக்குச் சாதனங்களை வழங்குபவர்களுக்கு முழுமையான அதிகாரம் உண்டு.
பொறுப்பான மற்றும் நம்பகமான பெரியவரால் குழந்தைகள் மேற்பார்வை செய்யப்படாதபோது இணையவழி வகுப்புகளுக்கு எந்த ஒரு சாதனத்தையும் குழந்தைகளுடன் பகிர்ந்துகொள்ள எவரையும் பெற்றோர் அல்லது பாதுகாவலரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. எந்த ஒரு இணையவழி வகுப்புகளிலும் எந்தக் குழந்தைகளிடமும் கட்டாயம் வேண்டும், அவசியம் வருகை கணக்கிடப்படும், தரநிலை மதிப்பெண்கள், மதிப்பீடு ஆகியவை இதன் அடிப்படையில் அமைந்திருக்கும் போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தி கலந்துகொள்ள நிர்பந்திக்கக் கூடாது.
ஆலோசகர்
அனைத்து ஆசிரியர் பள்ளி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இணையவழிக் கல்வி தொடர்பாக அறிவிக்கும்போது குரலால் அல்லது கடிதத்தின் வரைவு/ மொழியின் பயன் முறையிலும் கூட கட்டாயத்தில் ஒரு குறிப்பும் இருத்தல் கூடாது என்பதை உணர்த்த வேண்டும…
பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியரை ஆலோசகராக நியமிக்க வேண்டும். எந்த ஒரு இணையப் பாதுகாப்புப் பிரச்சினைகள் பற்றியும் தெரிவிக்க மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவும் வகையில் இணையவழி வகுப்புகள் தொடங்குவதற்கு முன்னரே ஆலோசகரின் கைப்பேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இணையவழி வகுப்புகளில் பெற்றோர் மற்றும் மாணவர்கள் குறை தீர்க்கும் வகையிலும் இணையவழி வகுப்புகள் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மேற்கொண்டுள்ள வேறு எந்த ஒரு உணர்ச்சிகரமான இடர்ப்பாடுகளையும் தீர்க்கும் வகையில் ஆலோசகர் செயல்பட வேண்டும்.
புகார் எண்
ஆன்லைன் பாடம் சம்பந்தமாக நியாயமான கோரிக்கைகள் குறைகள் ஏதும் இருப்பின் அதுகுறித்து முதன் முதலில் ஆசிரியர் ஆலோசகர் பள்ளி நிர்வாகத்திற்குத் தெரிவிக்கவும். ஆலோசகர் ஆசிரியர் பள்ளி நிர்வாகத்தினால் நியாயமான குறைகளுக்குப் பதில் ஏதும் கிடைக்கவில்லை எனில் தீர்வு மற்றும் துரித நடவடிக்கை வேண்டிய எந்த ஒரு புகாரையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கவனத்திற்குக் கொண்டு செல்லலாம்.
மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் இணையவழி வகுப்புகள் பற்றிய புகார்களைப் பெற வேண்டியும், குறைகள் மற்றும் சிக்கல்கள் பற்றி அறியவும் grievancesredressaltnpta@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்கள் பள்ளிக் கல்வித்துறையின் தொலைபேசி உதவி சேவை எண் 14417 பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.