சென்னையில் இருந்து பாலக்காடுக்கு செல்லும் தினசரி விரைவு ரயில் டிசம்பர் 8-ஆம் தேதியில் இருந்து இயக்கப்படவிருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக பொதுபோக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டது. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த அக்டோபர் மாதம் முதல் மீண்டும் ரயில் சேவைகள் தொடங்கின.
மத்திய அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு, மாநிலங்களுக்குள்ளேயும், வெளி மாநிலங்களுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே, சோதனைகளுக்குப் பின்னர் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பயணிகளின் தேவைக்கு ஏற்றாற்போல சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இருந்து பாலக்காடுக்கு செல்லும் தினசரி விரைவு ரயில் டிசம்பர் 8-ஆம் தேதியில் இருந்தும், மறுமார்க்கமாக பாலக்காட்டில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில் டிசம்பர் 9-ஆம் தேதி இருந்தும் இயக்கப்படவிருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.