பாலியல் தொந்தரவால் கரூரில் பள்ளி மாணவி தற்கொலை: அம்மாவிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது என்ன?

கோவையைத் தொடர்ந்து கரூரில் பாலியல் வன்கொடுமையால் 12ம் மாணவி ஒருவர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு காலணி பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பக்கத்து வீட்டு பாட்டி மாணவி நீண்ட நேரமாக வெளியில் வராததை கண்டு வீட்டினுள் சென்று பார்த்துள்ளார். மாணவி தூக்கில் தொங்கியவாறு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சிறுமியின் தாய்க்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவர் வந்த பிறகு வெங்கமேடு காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, மாணவி தற்கொலைக்கு முன்னர் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது :- sexual harresment ஆல சாகுர கடைசி பொண்ணு நானாக தான் இருக்கனும், என்ன யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு. இந்த பூமியில் வாழரத்துக்கு ஆசைப்பட்டேன். ஆனா, இப்போ பாதியிலேயே போறேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ கிடைச்சா நல்லா இருக்கும். பெரிதாகி நிறைய பேருக்கு உதவி பன்ன ஆசை ஆனா முடியாதில்ல. ஐ லவ் அம்மா, சித்தப்பா, மணி மாமா, அம்மு உங்க எல்லோரையும் ரொம்ப பிடிக்கும். ஆனா நான் உங்கிட்ட எல்லாம் சொல்லாம போகிறேன், மன்னிச்சுருங்க. இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக் கூடாது. சாரி மச்சான் சாரி என எழுதி கையெழுத்திட்டுள்ளார்.

இந்த கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு வெங்கமேடு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் பாலியல் தொல்லையால் பள்ளி சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்னும் அடங்குவதற்கு முன்பாகவே கரூரில் ஒரு மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version