சாத்தான்குளம்: தந்தை,மகனுக்கு கடுமையான காயங்கள்..பிரேத பரிசோதனை விவரம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் உயிரிழந்தவர்களின் உடலில் இருந்த கடுமையான காயங்களே, மரணத்திற்கு காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் வைத்து தாக்கப்பட்டதில் உயிரிழந்தது தொடர்பான, கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலை வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை  தாமாக முன்வந்து தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்நிலையில், காவலர்கள்  முருகன், முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இதுதொடர்பான விசாரணையின் போது சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவில்,
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்புக்கு உடலில் இருந்த கடுமையான காயங்களே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும், ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும் கடுமையான காயங்கள் இருந்தாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வழக்கு தொடர்பாக சிபிசிஐடி 60 பேரையும், சிபிஐ 35 பேரையும் விசாரித்துள்ளது. இந்த சூழலில், சிபிஐ விசாரணை இன்னும் முடிவடையாததால் ஜாமீன் வழங்க கூடாது என வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து  தலைமைக்காவலர் முருகன், காவலர்கள் தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, சிபிஐ தரப்பில் முழுமையான அறிக்கை தாக்கல் செய்த பின் ஜாமீன் கொடுப்பது பற்றி பரிசீலிக்கலாம் என தெரிவித்துவிட்டது.

Exit mobile version