11 புதிய மருத்துவக் கல்லூரிகளிலும் 2021-22-ஆம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை – முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் ஏற்கனவே உள்ள 3,250 இடங்களுடன், புதியதாக அமைய உள்ள 11 மருத்துவக் கல்லூரிகளுக்கும் சேர்த்து, வரும் 2021-22-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இணைய வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது,

கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 17-ல் இருந்து 16 ஆகவும், பேறுகாலத்தில் தாய்மார்களின் இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரையில் 2030-இல் அடைய வேண்டிய நீடித்த நிலையான இலக்குகளை, நாம் எடுத்த பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளால் இப்போதே அடைந்து விட்டதும் சாதனை. டாக்டர்.முத்துலட்சுமி மகப்பேறு உதவி திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இரண்டு பேறுகாலம் வரை 18,000 ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக அளவாக தமிழ்நாட்டில் மட்டுமே 99.9 சதவீதம் பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெறுவது இந்த திட்டத்தின் வெற்றியை காட்டுகிறது.

சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தை, 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில அளவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதில் மட்டுமல்லாது, மிகச் சிறந்த மனித வளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்தித் தருவதிலும், தமிழ்நாடு இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ்ந்து வருகின்ற காரணத்தினால், தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக விளங்குகிறது.

வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், தரமான மருத்துவ சிகிச்சையைக் குறைந்த செலவில் பெறுவதற்காக, பலரும் தமிழ்நாட்டிற்கு வருவதன் மூலம், தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் 1,350 கூடுதல் மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டு, மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களின் கனவை நனவாக்கியது அரசு.

அதிக அளவில் தமிழ்நாட்டைச் சார்ந்த கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மேலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட வேண்டும் என அரசு கொள்கை முடிவு எடுத்தது.

அதனடிப்படையில் 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டது. தற்போது தமிழ்நாட்டிலுள்ள 3250 மருத்துவப் படிப்பு இடங்களுடன், 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான 1650 புதிய மருத்துவ பட்டப்படிப்பு இடங்களை சேர்த்து 2021-22 ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவினை மெய்ப்பிக்கும் வகையில் 6 முதல் 12 வரை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு வழங்க அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.

கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையால், குணமடைந்து இல்லம் திரும்புவோரின் சதவிகிதம் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் உயிர் இழப்போரின் சதவிகிதமும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிகக் குறைவு. மருத்துவத்துறையில் தற்பொழுது நடைமுறையில் உள்ள அனைத்து நவீன சிகிச்சைகளும், தமிழ்நாட்டு மக்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் கிடைக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் அரசு பல்வேறு நவீன வசதிகளை அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தி வருவதால், அதிக அளவில் நோயாளிகள் குணமடைந்து வருகிறார்கள் என அவர் பேசினார்.

Exit mobile version