தஞ்சாவூரில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடல் பாகங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

தஞ்சையில் பட்டுக்கோட்டை நேருநகர் பள்ளிவாசல சேர்ந்தவர் நகைக்கடை அதிபர் சலீம் என்பவருக்கு, கடந்த ஜுலை மாதம் 23ம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில், கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி சலீம் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னர் அவரது உடல் பட்டுக்கோட்டையில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், சலீம் மனைவி சர்மிளா மற்றும் அவரது குடும்பத்தினர் சலீம் மரணத்தில் மர்மம் இருப்பதாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், சார் ஆட்சியர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மேலும் அவரது உடல், உள்ளுறுப்புகள் திருடப்பட்டு உள்ளதாகவும், புதைக்கப்பட்ட அவரது உடலை தோண்டி எடுத்து அரசு மருத்துவர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை ஆய்வு செய்ய வேண்டுமெனவும் அந்தக் குடும்பத்தினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில், உயிரிழந்த சலீமின் மனைவி சர்மிளா, மைத்துனர் சௌகத் ஆகியோரிடம் பட்டுக்கோட்டை அரசு மருத்துமனையில் மருத்துவத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராமு நேரில் விசாரணை நடத்தினார். அதேபோல் தனசேகரன் என்பவர் ஜுலை 17ஆம் தேதி இதே மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இறந்ததாக நிர்வாகம் அறிவித்தது. அவருடைய சாவிலும் மர்மம் இருப்பதாகக் கூறி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.