அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் இரு தரப்பினர் பொது இடத்தில் மூர்க்கமாக தாக்கிக் கொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவத்தை அப்போது அந்த வழியாக காரில் சென்றவர் வீடியோ எடுத்துள்ளார்.
மாணவர்கள் தாக்கிக் கொள்வதும், அவர்களை கண்டு பொதுமக்கள் மற்றும் மாணவிகள் விலகிச் செல்வதுமாக காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே அரசுப் பள்ளி மாணவர்கள் பலர் பல்வேறு சர்ச்சைகளில் ஈடுபடும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணிப்பது, புறநகர் மின்சார ரயிலில் பயணிக்கும் போது நடைமேடையில் சாகசம் செய்வது, வகுப்பறைக்குள் ஆசிரியர்கள் இருக்கும்போதே அநாகரீகமாக நடந்துகொள்வது, தட்டிக் கேட்கும் ஆசிரியர்களை தகாத வார்த்தைகள் சொல்லி திட்டுவது என மாணவர்களின் செயல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.
அந்த வரிசையில் கோயம்புத்தூரில் நடந்துள்ள இந்த சம்பவம் மீண்டும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும், இதுதொடர்பாக மாவட்ட கல்வி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.