மாணவி ஒருவரிடம் கல்லூரித் தலைவர் ஆபாசமாக வீடியோ கால் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்த சக மாணவிகள் தங்களை வேறொரு கல்லூரிகளில் சேர்க்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை செவிலியர் கல்லூரியில் படித்து வந்த மாணவியிடம், அந்த கல்லூரித் தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ் நிர்வாணமாக வீடியோ கால் பேசியுள்ளார். கடந்த 6 மாதத்துக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, கல்லூரி மாணவிகளிடம் பரவியுள்ளது.
இதையடுத்து தங்களுடைய கல்லூரியில் பாதுகாப்பு இல்லை என்று கூறி மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். மாணவிகளை போலீசார் சமரசம் செய்ய முயன்றும், அது பயனில்லாமல் போனது.
அதன் காரணமாக கல்லூரித் தலைவர் தாஸ்வின் கிரேஸை போலீசார் கைது செய்தனர். எனினும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த மாணவிகள், வேறு கல்லூரியில் படிப்பதற்கு இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.