அமராவதி அணையில் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் அமராவதி அணையிலிருந்து, குடிநீர் மற்றும் பாசனப் பகுதியில் நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு, தண்ணீர் வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, அமராவதி அணையிலிருந்து ஆற்று மதகு வழியாக கரூர் வரை, குடிநீர் தேவை மற்றும் 18 பழைய வாய்க்கால்களுக்கு உட்பட்ட ஆயக்கட்டுப் பகுதிகளில் நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு, நாளை முதல் 16.08.2020 வரை 11 நாட்களுக்கு 1210 மி.க.அடி தண்ணீர் மற்றும், அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் குடிநீர் மற்றும் நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு, நாளை முதல் 20.08.2020 வரை 15 நாட்களுக்கு, 570 மி.க.அடி தண்ணீர் என மொத்தம் 1780 மி.க.அடி தண்ணீரை திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். பொதுமக்கள் மற்றும் வேளாண் பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.