டெல்லியில் அடகு வைக்கப்பட்டுள்ள தமிழகத்தை மு.க.ஸ்டாலின் நிச்சயம் மீட்டு தருவார் என தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை :
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி வாக்குப்பதிவு என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்தநிலையில் சென்னை அண்ணாநகர் வேட்பாளர் எம்.கே.மோகனை ஆதரித்து தூத்துக்குடி எம்.பி. கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டு கூறியதாவது; திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டது போல, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு மாதம் ரூ. 1000, மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 100 மானியம் வழங்கப்படும் என்றார். அதேபோல், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3 ம் தேதி அணைத்து குடும்பங்களுக்கும் ரூ. 4000 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
Read more – அமைச்சர் எம்.சி.சம்பத் உறவினர் கணக்கில் பதுங்கிருந்த ரூ.11 கோடி.. வருமான வரி சோதனையில் சிக்கிய அம்பலம்…
மேலும், தமிழகத்தை தமிழகத்தில் இருந்து ஆள வேண்டும் என்றால் அது தளபதி ஸ்டாலினாக மட்டுமே இருக்க முடியும். நிச்சயம் அவர் ஆட்சிக்கு வந்தவுடன் டெல்லியில் அடகு வைக்கப்பட்டுள்ள தமிழகத்தை மீட்டு தருவார் அதற்கு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.