அவதூறு வழக்குகளை சட்டரீதியாக சந்திப்பேன் : முக ஸ்டாலின்

அவதூறு வழக்குகளை சட்டரீதியாக சந்திப்பேன் என்று முக ஸ்டாலின் முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

சென்னை :

தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறி இருப்பதாவது :

நியாய விலைக்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு முகக் கவசம் வழங்குவதாக சொல்லி, டெண்டர் முறைகேடு செய்த அதிமுக அரசு, அந்த முகக் கவசங்களைத் தயாரித்தவர்களுக்குரிய பணத்தை கொடுக்காமல் வஞ்சிக்கும் கொடுமையும் அம்பலமாகியுள்ளது. தேங்கிக் கிடப்பவை 5 கோடி முகக் கவசங்கள் மட்டுமல்ல; அதனைத் தயாரித்த பெண் தொழிலாளர்களின் வாழ்க்கையும்தான்!

இன்று “எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான” சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அதிமுக அரசு தொடர்ந்த 6 அவதூறு வழக்குகளில் ஆஜரானேன். சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே பல அவதூறு வழக்குகளை ரத்து செய்து அ.தி.மு.க. அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. ஆனாலும் இந்த அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. ஆளும்கட்சியின் தவறுகளை, ஊழல்களை விமர்சிப்பது ஒரு எதிர்க்கட்சியின் முக்கியக் கடமை பிரதான எதிர்க்கட்சியாக  திமுக விமர்சனம் செய்கிறது.

Read more – கொரோனா தடுப்பூசி ஒத்திகையில் வெற்றி : மத்திய அரசு

அவதூறு வழக்குகள் போட்டு தி.மு.க. வின் ஜனநாயக கடமையை தடுக்கவும், மிரட்டவும் முடியாது. திமுகவின் பேச்சுரிமையை, எத்தனை வழக்குகள் போட்டாலும் தடுக்க முடியாது. என் மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்குகளைச் சட்டரீதியாக சந்திப்பேன். அதிமுகவின் ஊழல்களை ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அம்பலப்படுத்துவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version