ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகின்றது.இதனால் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை தேடி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஆப்கானிஸ்தான் மக்களுக்கு விசா வழங்குவதை பாகிஸ்தான் அரசு கடந்த 7 மாதங்களாக நிறுத்தி வைத்திருந்தது.
தற்போது கொரோனா வைரசின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பாகிஸ்தான் மீண்டும் விசா வழங்க தொடங்கியுள்ளது.
அந்த வகையில் பாகிஸ்தான் தூதரகத்தில் கடந்த வாரம் முதல் விசா வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்காக நேற்று அதிகாலையிலேயே நூற்றுக்கணக்கான மக்கள் பாகிஸ்தான் தூதரகம் முன்பு திரண்டனர். கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததால் டோக்கன் முறையில் விசா விண்ணப்பிப்பதற்கு அனுமதிக்க தூதரக அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து தூதரகத்துக்கு அருகில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் வைத்து டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மைதானத்தில் திரண்டனர். டோக்கன் வழங்க தொடங்கியதும் மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் நிலைகுலைந்து கீழே விழுந்தனர். கூட்டத்தினர் அவர்கள் மீது ஏறி மிதித்து சென்றனர்.
இந்த கோர சம்பவத்தில் 11 பெண்கள் உள்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் என்று கூறப்படுகின்றது.இந்த கோரா சம்பவத்திற்க்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.