அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் அதிக கொரோனா நோயாளிகளை கொண்ட முதல் மாகாணமாக கலிபோர்னியா உள்ளது. அங்கு கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. தற்போது கொரோனாவால் முடங்கியுள்ள கலிபோர்னியா மாகாணத்தை காட்டுத்தீயும் திணறடித்து வருகிறது

அந்த வகையில் கடந்த சில வாரங்களாக கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. கடந்த மாதம் 15ம் தேதி முதல் தற்போது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்டுத்தீயை கலிபோர்னியா கண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான காட்டுத்தீ அணைக்கப்பட்டு விட்டாலும் ஒரு சில இடங்களில் காட்டுத் தீ கட்டுக்குள் வராமல் தொடர்ந்து பரவி வருகிறது. தற்போது கலிபோர்னியா மாகாணம் முழுவதும் 24 இடங்களில் பயங்கர காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்த காட்டுத் தீயை அணைப்பதற்காக கடுமையாக போராடி வருகின்றனர்.

இதற்கிடையில் சியாரா மலைப்பகுதியில் மாமூத் பூல் நீர்த்தேக்கம் அருகே மலையேற்றத்துக்காக சென்றிருந்த 200-க்கும் மேற்பட்டோர் காட்டுத்தீயில் சிக்கி கொண்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர்கள் அனைவரும் சிறிய ரக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


இதனிடையே பிரெஸ்னோ, மடேரா, மரிபோசா, சன்பெர்னார்டினோ மற்றும் சான் டியாகோ ஆகிய நகரங்களில் காட்டுத் தீ கட்டுக்குள் வராமல் தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மேற்கூறிய நகரங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Exit mobile version