September 17, 2026 09:14 PM GMT+5:30
மும்பை, செப்.17: இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பொதுப் பங்கு வெளியீடுகளில் ஒன்றான தேசிய பங்குச் சந்தையின் (NSE) IPO இன்று முதலீட்டாளர்களுக்குத் திறக்கப்பட்டது. ஆனால் முதல் நாள் முடிவில் விற்பனைக்கு வைக்கப்பட்ட பங்குகளில் 42 சதவீதத்திற்கே விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
மாலை 5.03 மணி நிலவரப்படி, பொதுப் பங்கு வெளியீட்டில் விண்ணப்பத்துக்குக் கிடைத்த 8.86 கோடி பங்குகளுக்கு எதிராக சுமார் 3.70 கோடி பங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதன் மூலம் முதல் நாள் ஒட்டுமொத்த சந்தா 0.42 மடங்காகப் பதிவாகியுள்ளது.
யாரிடம் அதிக வரவேற்பு?
முதல் நாளில் நிறுவனமல்லாத முதலீட்டாளர்களுக்கான பிரிவு 70 சதவீதம் நிரம்பியுள்ளது. சில்லறை முதலீட்டாளர்களுக்கான பங்குகளில் 42 சதவீதத்திற்கும், தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கான பிரிவில் 19 சதவீதத்திற்கும் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
இந்த எண்ணிக்கைகளை வைத்து NSE IPO-வுக்கு முதலீட்டாளர்களிடம் வரவேற்பு இல்லை என்று இப்போதே முடிவுக்கு வர முடியாது. பெரிய நிறுவன முதலீட்டாளர்கள் IPO விண்ணப்பக் காலத்தின் கடைசி கட்டத்தில் அதிக அளவில் பங்கேற்பது வழக்கமான ஒன்று என்றும், தற்போது ஒரே நேரத்தில் பல IPO-க்கள் நடைபெறுவதும் முதல் நாள் எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் சந்தை நிபுணர் ஒருவர் Reuters- யிடம் தெரிவித்துள்ளார்.
₹22,569 கோடி பிரம்மாண்ட IPO
NSE-யின் பொதுப் பங்கு வெளியீட்டின் மதிப்பு சுமார் ₹22,569 கோடி. ஒரு பங்கின் விலை ₹1,700 முதல் ₹1,785 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 8 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த IPO செப்டம்பர் 21 வரை திறந்திருக்கும்.
இதற்கு முன்னதாக Anchor முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் ₹6,746 கோடியை NSE திரட்டியுள்ளது. நார்வே மற்றும் அபுதாபி அரசுச் செல்வ நிதிகள் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.
NSE-க்கு இந்தப் பணம் கிடைக்குமா?
இந்த IPO-வில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் இதுதான். இது முழுவதும் தற்போதைய பங்குதாரர்கள் தங்களிடம் உள்ள பங்குகளை விற்கும் Offer for Sale முறையிலான வெளியீடு. எனவே IPO மூலம் திரட்டப்படும் தொகை NSE நிறுவனத்துக்குச் செல்லாது; பங்குகளை விற்கும் தற்போதைய பங்குதாரர்களுக்குச் செல்லும்.
மொத்தம் 12.64 கோடி வரையிலான பங்குகள் இந்தப் பொதுப் பங்கு வெளியீட்டில் இடம்பெற்றுள்ளன. ஒரு பங்கிற்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையான ₹1,785 அடிப்படையில் NSE-யின் மதிப்பீடு சுமார் 46 பில்லியன் டாலராக இருக்கும் என Reuters தெரிவித்துள்ளது.
10 ஆண்டுகளாகக் காத்திருந்த IPO
NSE பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதற்கான முயற்சி சுமார் ஒரு தசாப்தமாக நீடித்து வந்தது. ஒழுங்குமுறை ஆய்வுகள் மற்றும் பழைய சட்டப் பிரச்சினைகள் காரணமாக அதன் பட்டியலிடல் தொடர்ந்து தாமதமானது. தற்போது அந்த நீண்ட காத்திருப்புக்குப் பிறகு NSE IPO சந்தைக்கு வந்துள்ளது.
அடுத்து என்ன?
முதல் நாள் 42 சதவீத சந்தாவுடன் முடிந்தாலும் இன்னும் இரண்டு விண்ணப்ப நாட்கள் உள்ளன. செப்டம்பர் 18 மற்றும் செப்டம்பர் 21 ஆகிய தேதிகளில் முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம். தற்போதைய திட்டப்படி NSE பங்குகள் செப்டம்பர் 24 அன்று பட்டியலிடப்பட உள்ளன. எனவே முதல் நாளைவிட அடுத்த இரண்டு நாட்களில் வரும் விண்ணப்பங்களே IPO-வின் இறுதி வரவேற்பைத் தீர்மானிக்கும்.
