மயக்கத்தில் ஒரு மாணவன்

– ஆதலையூர் சூரியகுமார்

விமல் மனசெங்கும் ஒரு விதமான ரத்தவாடை பரவிக் கிடந்தது. கொன்று பழி தீர்த்து புதைத்துவிட வேண்டும் என்ற கோபத்தால் வழிந்துக் கொண்டிருந்த நெடி அவனைச் சுற்றி வீசி கொண்டிருந்தது. அவன் முகம் முழுக்க பூத்துக் கிடந்த வியர்வைத் துளிகளில், உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகர் மீதான வெறுப்பு எதிரொளித்தது. அவன் கண்களில் கருணையின் ஈரம் வறண்டுபோய் வெடித்துக் கிடந்தது.

அவன் தன் மூளைக்குள் பழிவாங்கும் உணர்வுகளை ரெக்கரிங் டெபாசிட் மாதிரி சேர்த்துக் கொண்டே வந்தான். பழைய நினைவுகளின் பக்கங்களைப் புரட்டிப் புரட்டி, வெறி குறையாமல் பார்த்துக் கொண்டான் விமல்.

ஒரு துளி ரத்தத்தையாவது பார்த்துவிட வேண்டும் என்று ஒரு ரத்தக்காட்டேரி அவனுக்குள் அமர்ந்துக் கொண்டு, உபதேசம் செய்து கொண்டிருந்தது.

ஒரு விபரீதமான சங்கிலியால் அவன் பிணைக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தான். அந்த சங்கிலியிலிருந்து அவன் தன்னை விடுவித்துக் கொள்ள முயலும்போதெல்லாம், அது அவன் கழுத்தைச் சுற்றி இறுக்கியது. சங்கிலிக்கு அடிமையாகி விடுவோம் என்று அவன் நினைத்தபோதெல்லாம், அது விலகி நின்று கைகொட்டிச் சிரித்தது.

தன்னை ஏளனம் செய்யும் சிரிப்பொலிகள் தன்னைச் சுற்றி காற்றில் கலந்திருப்பதாக அவன் கருதிக் கொண்டிருந்தான். சுடுகாட்டுக்கு நடுவே தூரமாகவும், அருகிலும் கேட்கும் வினோத ஒலிகளைக் கேட்டு நடுங்கிய பிறகுதான் விமல் அந்த ஆயுதத்தை எடுத்தான்.

“பழிவாங்கி விடுவது மட்டுமே சரியான தீர்வு. அவமானத்தால் ஏற்பட்ட காயங்களுக்கு இந்த ஆயுதத்தை வைத்தே மருந்து போட்டுக் கொள்ள வேண்டும்.”

அவன் உச்சி மண்டைக்குள் யாரோ போதனை செய்து கொண்டிருந்தார்கள்.

அவன் அந்தப் பாட்டிலை முழுமையாக காலி செய்துவிட்டு, உதட்டை சுழித்து துடைத்துக் கொண்டு, சுற்றியிருந்த நண்பர்களைப் பார்த்தான்.

“எல்லாம் ஸ்டெடியா இருக்கீங்களாடா? ஓவரா ஏத்திக்கிட்டு இங்கேயே விழுந்திடாதீங்கடா.” – விமல் நண்பர்களைப் பார்த்துக் கேட்டான்.

உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகரை இன்றைக்கு எப்படியாவது அடித்து விடுவது என்ற முடிவில் தீவிரமாக இருந்தான் விமல். அதற்கு நண்பர்களையும் தயார்படுத்தி அழைத்து வந்திருந்தான்.

“டேய், மச்சி, இன்றைக்கு அப்பா பாக்கெட்லேருந்து ஆயிரம் ரூபாய் அடிச்சிட்டு வந்திருக்கிறேன். முதல்ல சரக்கு அடிக்கிறோம், அப்புறம் அந்த வாத்தியாரை அடிக்கிறோம்.” -பாருக்குள் உட்கார்ந்திருந்த விமல் சொல்லிச் சிரித்தான்.

விமல் பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கிறான். கபடி ஆடினால் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். ஒரு ரைடு போனால் குறைந்த பட்சம் இரண்டு பேரையாவது அவுட் ஆக்கிவிட்டுத்தான் திரும்புவான்.

கால்களின் விரல்களை மட்டும் தரையில் அழுத்தமாக ஊன்றிக் கொண்டு அவன் ஒரு ஸ்டைலாக குதித்து ஆடுகிற ஆட்டத்தைப் பார்ப்பதற்காகவே, பள்ளியின் மாணவர்கள் எல்லாம் கூடிவிடுவார்கள்.    இதனாலேயே விமலை உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகருக்கு மிகவும் பிடித்துப்போனது.

“நான் வளர்த்துவிட்ட பையன்”, என்று சொல்லி பெருமை அடித்துக்கொள்வார்.

‘ஆறாம் வகுப்புப் படிக்கும் போது மூக்கு ஒழுகிக் கொண்டு என்னிடம் வந்தான் சார். அன்னைலேந்து இவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்று சொல்லும் போதெல்லாம் உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகரின் முகத்தில் ஒரு சந்தோஷம் பரவிப் படரும்.

ஆறு வருடங்களுக்கு முன் ஆறாம் வகுப்பில் சேர்ப்பதற்காக விமலை அழைத்து வந்திருந்தார் அவன் அப்பா. மேல் சட்டையில் பிய்ந்து போன பொத்தான்களுக்குப் பதிலாக ஊக்கு குத்தி மாட்டியிருந்தான். தேவையான அளவு எண்ணெய் தேய்க்காமல் தலைமுடி கலைந்து கிடந்தது.

“அஞ்சாங் கிளாஸ் வரைக்கும் எருமைப்படுகையில் படிச்சான் சார். உத்திராபதின்னு ஒரு வாத்தியார் நல்லா சொல்லித் தந்தாரு சார்.  ‘தத்தி தத்தி’ கொஞ்சம் இங்கிலீஷ் படிக்கக் கத்துகிட்டான். எங்கக் கெட்ட நேரம் அந்த வாத்தியார் வேற ஸ்கூலுக்கு ட்ரான்ஸ்ஃபராகி போயிட்டாரு. அதிலேருந்து இவன் ஒழுங்கா படிக்கிறதில்ல சார். எப்பப் பாருங்க, கபடி, கபடின்னு பசங்க கூட சேர்ந்து விளையாண்டுகிட்டே இருக்கான் சார். தூங்குறப்பக்கூட கபடி விளையாடற மாதிரியே கனவு காண்றான் சார் இவன்.”

விமலின் அப்பா தலைமை ஆசிரியரிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது, அருகிலேயே இருந்துக் கவனித்துக் கொண்டிருந்த உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகரின் முகம் மலர்ந்தது. ‘இப்படியொரு ஆளைத்தான் சார் தேடிகிட்டு இருக்கேன்’ என்பது மாதிரி அவனைப் பார்த்தான்.

திடகாத்திரமாகவே இருந்தான் விமல். கிராமத்து சாப்பாடு. எட்டாம் வகுப்பு பசங்களோடு விளையாட விட்டுப் பார்த்தார். எதிராளியிடம் பிடிபடும் போதெல்லாம் ‘கெளுத்தி’ மீன் மாதிரி நழுவி துள்ளிக் குதித்து ஒடி வருவான். அங்கே ஆறு பேர் அவுட் ஆகியிருப்பார்கள்.

எதிரணியில் இருந்து ரைடு முடித்து விட்டுப் போன அடுத்த செகண்டில் சரேலென பின்னால் சென்று இரண்டு பேரை காலி செய்வான்.

அவனுடைய ஆட்டம் பி.டி. மாஸ்டருக்கு மிகப்பெரிய ரசனையாக இருந்தது. சுட்டிப் பையனாக இருந்தாலும் சூறாவளி மாதிரி விளையாடும் அவனது ஆட்டத்தைப் பார்த்து சந்தோஷத்தில் விழுந்து விழுந்து சிரிப்பார்.

ஸோனல் லெவல், டிஸ்ட்ரிக்ட் லெவல், ஸ்டேட் லெவல் என்று விளையாடி பதக்கங்களை அள்ளிக்கொண்டு வந்தான் விமல். அவன் பெற்ற பதக்கங்களை எல்லாம் கழுத்தில் போட்டபடி உள்ளுர் பத்திரிகைகளில் செய்திகள் கூட வந்தன.

ஆறு மாதங்களுக்கு முன்புதான் அப்படியொரு மாபெரும் தவறை செய்து மாட்டிக்கொண்டான் விமல்.

பதினோறாம் வகுப்புக்கு வந்தவுடனேயே அவனிடம் சில மாற்றங்கள் தெரிவதை உணர்ந்து இருந்தார். தன்னுடைய ஒட்டு மொத்தக் கட்டுப்பாட்டிலிருந்து அவன் கொஞ்சம் கொஞ்சமாய் விலகுவதை அவர் அறிந்துக் கொண்டிருந்தார். “பெரிய பையன் ஆகிவிட்டான், வயசுக் கோளாறு வேறு, இப்படித்தான் இருப்பான்.” என்று இவரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

ஆனால் இப்படியொரு தவறை செய்துவிடுவான் என்று பி.டி. மாஸ்டர் எதிர்பார்த்திருக்கவில்லை.

அரியலூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டி அது. வழக்கம் போல விமல் டீம் தான் வின்னர் டீம். விமலுக்கு ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது வேறு அறிவித்திருந்தார்கள்.

பரிசுகளை வாங்கிக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு பி.டி. மாஸ்டர் கண்களில் மண்ணைத் தூவி விட்டு போனவன் நீண்ட நேரம் கழித்து தள்ளாடியபடியே திரும்பி வந்தான்.

“நல்லா குடிச்சிருக்கான் பாவி.”

பி.டி. மாஸ்டருக்கு தூக்கி வாரிப் போட்டது.

மறுநாள் பள்ளிக்கூடம் வந்தவனை அழைத்து நீண்ட நேரம் அறிவுரைகள் சொன்னார் பி.டி. மாஸ்டர்.

“இனிமேல் செய்யவே மாட்டேன்” என்று சத்தியம் செய்தான். ஆனாலும் அவன் நன்றாக குடிக்கப் பழகிவிட்டான்.

கல்லூரியில் படிக்கும் சிலர் அவனோடு கூட்டு சேர்த்துக் கொண்டு அவனை கெடுக்கிறார்கள் என்பது பி.டி. மாஸ்டருக்கு தெரிந்தே இருந்தது.

பெற்றோர்களிடம் சொல்லிப் பார்த்தார். நண்பர்களிடம் சொல்லிப் பார்த்தார். அவன் யாருடைய அறிவுரையையும் கேட்க முடியாத கட்டத்திற்கு, ஒரு சில மாதங்களில் மாறிப் போயிருந்தான். பி.டி. மாஸ்டருக்கு வருத்தமாகவே இருந்தது. குடிப்பழக்கம் அவனை ஒரு பேய் மாதிரி பிடித்துக் கொண்டு ஆட்டியது.

எப்படியும் விமலை மீட்டுக் கொண்டு வந்துவிட முடியும் என்று, அவனை கபடியின் பக்கம் முழுமையாக திருப்பி ஆடவிட்டுப் பார்த்தார் பி.டி. மாஸ்டர்.

ஆனால் அவன் ஆட்டம் மழுங்கிப் போய் இருந்தது, ‘சுரத்தே’ இல்லாமல் அவன் ஆடிய ஆட்டங்களை காணச் சகிக்காமல் கண்களை மூடிக்கொண்டார் பி.டி. மாஸ்டர். எல்லை மீறிப் போயிருந்தான் விமல். எத்தனையோ முறை குடித்துவிட்டு வந்து கபடி ஆடி, பி.டி. மாஸ்டரை அவனமானப் படுத்தியிருக்கிறான்.

இனிமேலும் இவனோடு போராட முடியாது என்றுதான், அவனை கபடி டீமீல் இருந்து விலக்கி விட்டார் பி.டி. மாஸ்டர். ஒரு விளையாட்டு வீரன் இப்படி அழிந்து போகிறானே என்று அவரால் பரிதாபப்பட மட்டுமே முடிந்தது.

அந்தக் கோபம்தான் இப்போது விமலிடம் கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்தது. அவனுடைய மோசமான நண்பர்கள் அந்த எரியும் தீயில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு இருந்தார்கள்.

தூக்கி வளர்த்தது, தோள் மீது தூக்கி கொண்டாடியது, எல்லாவற்றையும் மறந்து தூரப் போட்டுவிட்டு, அவரை அடித்து அசிங்கப்படுத்திவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டு இருந்தான்.

“டேய், மச்சி, பள்ளிக்கூடம் விடற நேரம் எல்லா பசங்களையும் அனுப்பிட்டு கடைசியாதான் வருவாரு. டூ வீலரை மறிச்சு ஒரே போடு, கீழே விழுந்துடுவாரு… அப்புறம் எந்தக் கையை நீட்டி என்னை திட்டினாரோ அதுல ஒரே அடி, கை முறிஞ்சு தொங்கணும், அப்படியே எஸ்கேப் ஆயிடறோம்.”- திட்டத்தை விவரித்தான் விமல்.

“இன்னொரு ரவுண்ட் சாப்பிடலாமா?” கேட்டுவிட்டு எல்லோருடைய முகத்தையும் பார்த்தான் விமல்.

அதற்குள் பார் உரிமையாளர் வந்து எல்லோரையும் விரட்டினார்.

“பசங்களா, கௌம்புங்க. எல்லாம் சின்னப்பசங்களா இருக்கீங்க, அதிலும் விமல், நீ ஸ்கூல் யூனிஃபார்ம் வேற போட்டிருக்க. கௌம்புங்க கௌம்புங்க. எனக்குப் பிரச்சனை ஆயிடும்.”

“உனக்கென்ன காசுதான வேணும்? வாங்கிக்க. நாங்க இன்னொரு ரவுண்டு சாப்பிடப்போறோம்.” -விமல் கூவினான்.

“படிக்கிறது பன்னிரெண்டாம் கிளாஸ்னு நினைக்கிறேன், பேச்சைப் பாரு, வா… போன்னு பேசற…?”

அருகில் சென்று அவனைப் பிடித்து வெளியில் தள்ளினார் உரிமையாளர். வாய்ச்சண்டை முற்றி கைகலப்பானது.

“சார்… சார், நம்ம பன்னிரெண்டாம் க்ளாஸ் விமலைப் போட்டு அடிக்கிறாங்க சார், பாவம் சார், வந்துக் காப்பாத்துங்க சார்.”

வண்டியில் வந்துக் கொண்டிருந்த பி.டி. மாஸ்டரை வழி மறித்து சொன்னான் விமலுடன் படிக்கும் பிரவீன்.

“கொஞ்ச நஞ்ச பேச்சா சார் பேசறான் இவன். எவ்வளவு குடிக்கிறது சார்? ஒரு பாட்டில் உள்ள போன உடனே, என்னையே உதைப்பேங்கிறான். இவனெல்லாம் வளர விட்டா, நாட்டுக்கே கேடு சார்.”

-சொல்லி விட்டு, பார் உரிமையாளர் அவனை வளைத்து வளைத்து தலையில் ரத்தம் வழிய அடித்தார்.

“யாரையோ அடிக்கிறதுக்கு பசங்களை வேற கூட்டிட்டு வந்திருக்கான் சார் இவன். எல்லாரும் தப்பிச்சிட்டாங்க சார். கொலை கேஸ் ஆனாலும் பரவால்ல சார், இவனை இங்கேயே போட்டுத் தள்ளிடறேன்.”

சொல்லிக் கொண்டே கட்டையை ஓங்கியவரை கையெடுத்துக் கும்பிட்டார் பி.டி. மாஸ்டர் சந்திரசேகர்.

“இவன் என் இன்னொரு பையன் சார். விட்ருங்க சார். ப்ளீஸ்.”

பி.டி. மாஸ்டர் கெஞ்சியதைப் பார்த்து கட்டையை கீழே போட்டுவிட்டு நின்றார் பார் உரிமையாளர்.

விமல் பி.டி. மாஸ்டரை கண்களில் நீர் வழிய கையெடுத்துக் கும்பிட்டான். இனிமேல் குடிக்க மாட்டேன் என்பது போல தலையை ஆட்டினான்.

ஒரு விளையாட்டு வீரனை மீட்டுக்கொண்டு வந்துவிட்ட மகிழ்ச்சியுடன், அவனை தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார் பி.டி. மாஸ்டர்.

– கதைப் படிக்கலாம் – 62

இதையும் படியுங்கள் : கிருமி நாசினி

Exit mobile version