– ஜெயசீலன் ஜவகர்

“ஏங்க.. எத்தன வாட்டி சொல்றது… நான் சொல்றது உங்க காதுல விழவே விழாதா” என்று சற்று எரிச்சலுடன் விஜய்யை பார்த்து கேட்டாள் கிருத்திகா.
“நீ எத சொல்ற” என்று தெரியாதவன் போல் கேட்டான் விஜய்.
“ம்ம்..தனிக்குடித்தனம் போகணும்னு சொன்னேனே…அதை பற்றிதான்” என்று கிருத்திகா பதிலளிக்க, சட்டென்று கோபத்துடன் கிருத்திகாவை ஒரு பார்வை பார்த்தான் விஜய்.
“ஏடி, எல்லாரும் கல்யாணம் ஆன புதுசுல தனிக்குடித்தனம் போக ஆசைப் படுவாங்க, நீ என்னடான்னா ரெண்டு குழந்தை பெத்ததுக்கு அப்புறம் போகனும்னு அடம் பிடிக்கிற..உனக்கு நிறைய விஷயம் தெரியாது, ஆத்திரத்தில் வார்த்தையை விடாத..” என்று சற்று கோபத்தை அடக்கிக் கொண்டு மெதுவாக கேட்டான் விஜய்.
“உங்ககிட்ட எத்தனை வாட்டி நான் சொல்றது!! நான் காலையில எழும்பி ஸ்கூலுக்கு வேலைக்கு போகணும், அதுக்கு ரெண்டு குழந்தைகளையும் கூட்டிட்டு போகணும். நீங்களும் காலையில் எழும்பி வேலைக்கு போகணும். அதுவும் நீங்க பார்க்கிறது சைட்ல இன்ஜினியர் வேலை…மத்தியானம் வீட்டுக்கு வர மாட்டீங்க.. உங்களுக்கும் சேர்த்து சமைக்கவும், வீட்ல உங்க அம்மாவையும் நான் பார்த்துக் கொள்ளவும் என்னால முடியலப்பா!!.
அதனாலதான் நான் சொல்றேன், ஒன்னு உங்க அம்மாவை உங்க தங்கச்சி வீட்டுக்கு அனுப்பி விடுங்க.. இல்ல, ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு வாங்க.. என்னால இனி முடியாது. சம்பளம் முழுவதையும் உங்க அம்மாவே எடுத்துக் கொள்ளட்டும், எனக்கு பிரச்சனை இல்லை..எல்லாம் செஞ்சும், உங்க அம்மாகிட்ட நான் திட்டு வாங்கிக் கொண்டு இருக்கிறேன் அது சரியில்லை… இது சரியில்லை என்று ஆயிரத்தெட்டு குறை.. என்று சொல்ல, கிருத்திகாவை இந்த முறை கொஞ்சம் சிந்தனையுடன் பார்த்தான் விஜய்.
கிருத்திகாவையும் குறை சொல்ல முடியாது. பரபரப்பான இந்த உலகில், அவளும் வேலைக்குப் போகவேண்டும். இரண்டு பேர் வேலை செய்தால் தான், வீட்டை நடத்த முடியும் என்ற நிலை. அவளுக்கு அந்த டென்ஷன். முதல் நான்கு வருடம் நன்றாகத்தான் இருந்தாள். இரண்டு குழந்தைகள் பிறந்தப் பிறகு, செலவை சமாளிக்க முடியவில்லை என்று… நான் வேலைக்கு போவேன் என்று, பக்கத்திலுள்ள பள்ளியில் வேலைக்கு சேர்ந்தாள்.. சோர்வு, டென்ஷன் இது எல்லாம் சேர்ந்துதான், கொஞ்ச நாளாகவே இந்த எண்ணம்.
இரண்டு பக்கமும் மத்தளத்துக்கு அடி போல, விஜய்க்கு இரண்டு பக்கமும் அடி… விஜய்க்கு மனைவியும் வேண்டும்… அம்மாவும் வேண்டும்…கிருத்திகா நல்ல பொண்ணு தான், இனியும் ஒரு சில விஷயங்களில், அவளிடம் சொல்லாமல் இருக்கக் கூடாது என்று முடிவெடுத்து, இதற்கு நிரந்தரமாக ஒரு முடிவு எடுக்க வேண்டும்… எதையாவது செய்து சரி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், தூங்கப் போனான் விஜய்.
ஒரு வாரம் கழித்து, அம்மாவின் துணிமணிகள், மருந்து மாத்திரைகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, அம்மாவையும் கூட்டிக் கொண்டு வெளியே கிளம்பும் விஜயை பார்த்து, ”என்னங்க ..எங்கே போறீங்க” என்று கேட்டாள் கிருத்திகா.
”அம்மாவுக்கு களக்காடு முதியோர் இல்லத்தில் இடம் பார்த்திருக்கிறேன். இனி அம்மா அங்கு தான் இருக்க போறாங்க” என்று கூறிவிட்டு, கிருத்திகாவின் எந்தப் பதிலையும் எதிர்பாராமல், வெளியே கிளம்பினான் விஜய்.
”நான் போய்ட்டு வரேம்மா” என்று மருமகளிடம் கூறினாள், விஜய்யின் அம்மா. இதை சற்றும் எதிர்பாராத கிருத்திகாவுக்கு, என்னே சொல்வது என்றே தெரியாமல்”… சரி போய்ட்டு வாங்க அத்தை’ என்று கூறிவிட்டு, தலை குனிந்தவாறு வீட்டுக்குள் சென்றாள், கிருத்திகா .
முதியோர் இல்லத்தில் இருந்து திரும்பும் பொழுது, கிருத்திகா கூட சண்டைப் போடக் கூடாது என்று சொல்லி அனுப்பினாள் அம்மா. வீட்டுக்கு திரும்பிய விஜயிடம், கிருத்திகா எதையும் காட்டிக் கொள்ளாமல், வழக்கமான பணிகளில் ஈடுபட்டாள்.
மறுநாள் காலை வெள்ளிக்கிழமை, உற்சாகமாக கோவிலுக்கு கிளம்பினாள் கிருத்திகா.
“ஏங்க நாங்குநேரி கோயில்ல ஏதோ விசேஷ பூஜை, நாம எல்லாம் இன்னைக்கு அங்க போயிட்டு வரோம்.. சீக்கிரம் கிளம்புங்க” என்று விஜய்-யை அவசரப்படுத்தினாள், கிருத்திகா.
கோயிலுக்குப் போகிற வழியில் தோழி பிரியாவை பார்த்தாள் கிருத்திகா. தோழியின் காதில் சென்று ஏதோ முணுமுணுக்க “நீ எடுத்தது தான் சரியான முடிவு” என்றாள் பிரியா. ஒரு சந்தோசமான சிரிப்புடன், கணவருடன் கோயிலுக்கு போய்விட்டு வீடு திரும்பினாள் கிருத்திகா.
“இப்போ சந்தோஷமா!! சாமி நிச்சயமா உன் வேண்டுதலைக் கேட்கும்” என்று சற்று கிண்டலாக கேட்டான் விஜய்.
“ஆமா சந்தோஷம்தான்” என்று எரிச்சலுடன் பதில் சொன்னாள், கிருத்திகா.
இதைக் கேட்ட விஜய்க்கு கோபமும் ஆத்திரமும் வந்தது.
“உனக்கு எங்க அம்மாவை பத்தி புரிஞ்சது அவ்வளவுதான். நீ என்னுடைய அம்மாவை, உன்னுடைய அம்மாவாக பார்த்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது. என் அம்மாவைப் பற்றி உனக்கு என்ன தெரியும்டி.. நமக்குக் கல்யாணம் ஆனவுடன், என் தங்கச்சி அவ வீட்டுக்குக் கூட்டிட்டு போக ரெடியா இருந்தா.. ஆனா எங்க அம்மா என் கூட தான் இருப்பேன்னு, இங்க வந்தாங்க. நானே எதுக்குன்னு கேட்டதுக்கு, பெண் பிள்ளைகளை எல்லாம் இன்னொரு இடத்தில் நாம் கட்டிக் கொடுத்து விடுகிறோம், அவர்களிடத்தில் நமக்கு உரிமை இல்லை.. ஆனால், அதே நேரத்தில், ஏதோ ஒரு வீட்டிலிருந்து உன்னை மட்டுமே நம்பி, உன் அம்மாவையும் தன் அம்மாவாக நினைத்துக் கொண்டு ஒருத்தி வாராலப்பா.. அவதான்ப்பா இனி என் மக..எனக்கு என் பெற்ற பிள்ளைகள் விட, இனி அவ கிட்ட தான் உரிமை.. நான் அவக் கூடத்தான் இருப்பேன்னு, என்கிட்ட சொன்னாங்க, அது உனக்கு தெரியுமா… சற்றுக் கோபத்துடன் சொன்னார் விஜய்.
“அதுமட்டுமா, கல்யாணம் ஆனவுடன் ஒரு மாதத்திலேயே, தன் பங்கில் வரவேண்டிய சொத்துகள் அனைத்தையும் விற்று, அதை உன் பெயரிலேயே பணம் பத்திரமாக LIC-ல் டெபாசிட் செய்து இருக்கிறார்.. அது உனக்கு தெரியுமா? இதை உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு சொல்லிவிட்டார் என் அம்மா.. உனக்கு எதுவுமே தெரியாது… அவசரப்பட்டு எவ்வளவு கீழ்த்தரமான முடிவு எடுத்துட்டா.. அந்த மனசு என்னப் பாடு பட்டிருக்கும், கொஞ்சமாவது யோசித்து பார்த்தியா… சரிமா நீ சந்தோசமா இரு என்று வாழ்த்திவிட்டு கோபமாக படுக்கைக்கு போனான் விஜய்..
இதைக் கேட்டதும் கிருத்திகா மனதைத் குற்ற உணர்வு வாட்டியது, தவறு செய்து விட்டோமே என்று மனம் வதங்கியது… சே… எவ்வளவு அவசரப்பட்டு விட்டேன்.. நான் இவ்வளவு கேவலமானவளா… தன்னைத்தானே ஒருமுறை கேட்டுக்கொண்டால் கிருத்திகா.. மனதிற்குள் ஒரு தீர்க்கமான முடிவெடுத்து கொண்டு தூங்கப் போனாள் கிருத்திகா.
இரண்டு நாள் எதுவும் பேசவில்லை. மூன்றாம் நாள் கணவனை அழைத்தாள். தன்னை மன்னித்து விடுமாறு கெஞ்சினாள், கிருத்திகா. உடனடியாக உங்கள் அம்மாவை இங்கே கூட்டிட்டு வந்து விடுவோம் என்று கூறினாள், கிருத்திகா. விஜய்க்கு ஆச்சரியமாக இருந்தது. அதே நேரத்தில், மனமாற்றம் வந்ததற்காக சந்தோஷப்பட்டுக் கொண்டான். அவனது முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே இதைக் கருதினான். அதே நேரத்தில், பணத்தைப் பற்றி சொன்ன உடனே மாறிய அவள் மனதை, கொஞ்சம் வெறுக்கவும் செய்தான் .
சந்தோஷமாக வீட்டிற்கு மாமியாரை அழைத்து வந்தாள், கிருத்திகா. கண்ணீரோடு ஆரத்தழுவிக் கொண்டாள். அதே நேரத்தில் மாமியார் கண்களிலும் கண்ணீர். அதே நேரத்தில் மிகுந்த சந்தோஷம்… மருமகள் நம்மைப் புரிந்துக் கொண்டாள் என்று.
ஒரு சில நாட்கள் கழித்து, தற்செயலாக பீரோவை பார்த்தப் பொழுது தன் அம்மா கிருத்திகாவுக்காக எழுதி வைத்த பணம் பத்திரம், காணாமல் போயிருந்தது. எல்லா இடத்திலும் தேடியும், எங்கும் கிடைக்கவில்லை.
“ஏங்க கொஞ்சம் இங்க வாங்க” என்று விஜய்யை கூப்பிட்டு “என்ன தேடுகிறீர்கள்” என்று கேட்டாள், கிருத்திகா.
“எங்க அம்மா உனக்கு கொடுத்த பணம் பத்திரம் காணவில்லை… அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று மனம் பதைபதைப்போடு சொன்னான் விஜய்.
“அதுவா.. அந்த பத்திரத்தை எடுத்துக் கொண்டு LIC-யிலே பணமா மாற்றி விட்டு, அம்மா இருந்த அந்த முதியோர் இல்லத்துக்கு நன்கொடையாக கொடுத்துட்டேன்” என்று சாதாரணமாக சொன்னவுடன், சற்று ஆச்சரியம் கலந்த கோபத்துடன் பார்த்தான் விஜய்.
“ஆமாங்க.. உங்க அம்மா எனக்காக, தன்னுடைய சொத்துக்களை எல்லாம் எழுதி வச்சி இருக்காங்க அப்படின்னு சொன்ன உடனே, என் மனம், உங்க அம்மா, என் மேல் வைத்த அன்பை புரிஞ்சிக்கிட்டு மாறிடுச்சு.. அதே நேரத்துல, உங்க அம்மா என் மேல வைத்த அன்பினால் தான் அது மாறிடுச்சி அப்படின்னு சொன்னா.. நீங்க கூட நம்ப மாட்டீங்க.. இப்பக் கூட நீங்கள் ஒருவேளை, நம் அம்மா இவ பேர்ல பணம் போட்டு இருக்காங்க. அதனால தான் இவ மறுபடியும் போய் கூட்டிட்டு வந்துட்டா என்று நீங்கள் நினைப்பீங்க. அந்த எண்ணம் எக்காரணம் கொண்டும் வந்து விடக்கூடாது.
உண்மையிலேயே என்னுடைய இந்த மனமாற்றத்திற்கு காரணம், உங்க அம்மாவின் அந்த உண்மையான அன்பு தான் தவிர, உங்கள் அம்மாவின் அந்த பணம் அல்ல, அதை உங்கக் கிட்ட நிரூபிக்க, வேற வழி தெரியல… இல்லை என்றால், உங்களுக்கும் அந்த எண்ணம் காலம் முழுவதும் உறுத்திக்கொண்டே இருக்கும்.. அதான் அந்த பணத்தை எல்லாம் எடுத்து, அம்மாவை நாம விட்டு வந்த முதியோர் இல்லத்துக்கு கொடுத்து விட்டு வந்து விட்டேன்” என்று சொன்ன கிருத்திகாவை, கொஞ்சம் ஆச்சரியமாகவும், பெருமையுடனும் பார்த்தான் விஜய்.
– கதைப் படிக்கலாம் – 9
இதையும் படியுங்கள் : சாமி