மரணம் மன்னிக்கப்பட்டது

– குமரன் பெருமாள்

அவள் சாகலாம் என்ற முடிவோடு ரயில்வே ஸ்டேஷனில் உட்கார்ந்து கொண்டு இருந்தாள்…

கண்ணீர் அவள் கன்னங்களில் கொப்பளம் போட்டு இருந்தது. தண்டவாளங்கள் அதிர ரயில்கள் கடந்துக் கொண்டு இருந்தன. தண்டவாளத்திற்கு இடையே பொந்துகளில் வாழ்ந்து வந்த ஒன்றிரண்டு எலிகள் தலையை வெளி தூக்கி வரலாமா? வேண்டாமா? என்று எட்டிப் பார்த்துக்கொண்டு இருந்தன…

அவள் மனம் தான் வாழ்ந்த எல்லா நினைவுகளையும் அசை போட்டுக் கொண்டு இருந்தது.

அவள் பெயர் குரலினியாள். IT துறையில் வேலையும், அழகும் உடைய சராசரி இளம் வயது நகரத்து பெண். தன் handbag-ல் இருந்து டைரி ஒன்றை வெளியே எடுத்து, அவளது எண்ண ஓட்டங்களை எழுத்தாக மாற்றிக் கொண்டு இருந்தாள். கண்ணீரும், ரயிலும் வந்தப்படியே இருந்தது, அவளின் எழுத்து நடையோடு.

சுற்றி இருந்த ரயில்வே காவல் துறையினர் உட்பட சிலர், அவளின் நடவடிக்கைகளை,  அழுகையை கவனித்துக் கொண்டு இருந்தனர்.

ஆனால் அதையெல்லாம் அவள் மதிக்கக்கூட இல்லை. அவளோ, அவளுடைய அம்மாவுக்காக, தங்கைக்காக, நண்பர்களுக்காக, இந்த நிலைக்கு வர காரணமான காதலனுக்காக, தன் கடைசி வார்த்தைகளை வடித்துக் கொண்டு இருந்தாள் கண்ணீரோடு.

அவள் அழுகை நின்றபாடாக இல்லை. ஊரையே எழுப்பி விடும் சத்தத்தை ரயில்வே துறையின் அறிவிப்புகளும், ரயில்களும் கக்கிக் கொண்டே இருந்தன.

குரலினியாள் மனமோ கனத்த, இருளடைந்த மௌனத்தை கனன்று கொண்டு இருந்தது. இப்படி இருக்க அவளின் மனக்கதவை காதின் வழியே தட்டியது, அவளின் அலைபேசியின் ஓசை.

எடுத்துப் பார்த்தால், அவளின் சக அறைவாசி, உற்றத் தோழியான மதிவதிணி.

அவளின் அழைப்பை துண்டித்து விட்டாள். அடுத்த சில கணங்களில் மீண்டும் கீச்சிட்டது… பவளாவின் நட்பு, அலைபேசி வழியே…

வேறு வழியில்லாமல் எடுத்தாள். “குரல், அவசரப்படாத ??? நேர்ல பேசிட்டா எல்லாம் சரியாயிடும். எங்க இருக்கனு மட்டும் சொல்லு?

என்று ஆருடம் பார்த்தவள் போல், பரபரப்பாக சமாதானப்படுத்திட பேசினாள் மதிவதிணி.

குரலினியாள் மீண்டும் தொடர்பை துண்டித்தாள்.

மீண்டும் இவளின் மனம் மௌன உலகிற்குள் பிரயாணித்தது.

தன்னிடம் பேசியவள் உற்ற தோழி தான்… அதுவும் அவளின் கஷ்டங்களை பலமுறை தன்னிடம் கூறி அழுத தோழி, மதிவதிணி தான்.

என்ன செய்வது? நட்பின் துணையை விட, சாவின் துணை தற்போது தேவைப்படுகிறது.

மதிவதிணி திருமணம் ஆனவள். காதல் திருமணம் செய்தவள். நிதானமானவள். கணவன்-மனைவி இருவரும் இயற்கையின் இணைப்பே இல்லாமல் வாழ்ந்து வருபவர்கள். திருப்தி இல்லாத தாம்பத்ய வாழ்க்கை, அவளின் கணவருக்கு இருக்கும் பிரச்சனையால்.

இது அவர்கள் இருவருக்குமே இயலாமையை, வலியை அளித்துக் கொண்டு இருந்தது.

இதைப் பற்றி பலமுறை குரலினியாளிடம் கூறி இருக்கிறாள். “நாங்க எங்கக் கல்யாணத்துக்கு பிறகு தான் தாம்பத்யம் வெச்சுக்கனும்னு முடிவுல இருந்தோம். அவருக்கு இப்படிப்பட்ட பிரச்சனை இருக்குறது எனக்கு அப்புறம்தான் தெரியவந்தது. Society and family-யோட பேச்சுக்காக, நாங்கள் பொய்யான வாழ்க்கையை வாழ்ந்து வரோம்” என்று சேர்த்து வைத்த காசெல்லாம் ஓர் நாள் செல்லாது என்று சொன்னது போல் வெறுமையும், மனவலியும் இருந்ததைக் குரலினியாளிடம் கூறியதும்..

அதற்கு குரலினியாளோ “உன் இடத்துல நான் இருந்து இருந்தா, எப்பயோ அவனை விட்டுப் பிரிஞ்சு இருப்பேன்”, என்று மனதில் நினைத்ததையும், அப்போதைக்கு அவளுக்குத் தேவையான ஆறுதலை பொய்யாக தந்ததையும், தண்டாவளங்களின் சில அடிகள் இடைவேளையில் இருந்த அவள் நினைத்துக்கொண்டாள்.

இன்பம் தராத காதல் கணவனின் திருமண வாழ்க்கையை கூட பிரிந்து விடுவேன் என்றவள், இன்று வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அளவிற்கு வந்துவிட்டாள்.

இவளின் அழுகையை கவனித்தது மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அவளின் அடுத்த நகர்வை கணித்து விட்ட ரயில்வே போலீசார்களில் ஒருவர் அவளருகில் வந்து, “ஏம்மா, என்னம்மா பிரச்சனை, ரொம்ப நேரமா நீயும் அழுதுட்டு இருக்க??? வேண்டியவங்க யாராயாச்சும் வரசொல்லுமா.. உன்னைக் கூட்டிட்டு போக” என்று கவலையும், கருணையுமாக கேட்டார்.

உடனே அவள் அவர்களிடம்… “இல்ல, என் தனிப்பட்ட பிரச்சனை, நீங்கப் போங்க, நான் பாத்துக்கிறேன்” என்றாள்.

மீண்டும் அவர்கள், “ஏம்மா நீ ஏதாச்சும் பண்ணிக்கிட்டா, எங்களுக்கு தான்மா பிரச்னை. எல்லாருக்கும் தான் பிரச்சனை இருக்கு. அதுக்குன்னு எல்லாரும் அழுதுட்டு இருந்தா உலகம் என்ன ஆகுறது..?” என்று பதட்டத்தோடு கேட்டார்.

சாவிலும் இடைஞ்சலா? என்ற விரக்தியில், அவள் “என்னைய பாத்துக்க எனக்குத் தெரியும், என்னக் கொஞ்சம் தனியா விடுங்க” என்று விரக்தியின் உச்சத்தில் பேசினாள். அவர்களும் வேறு வழி இல்லாது, அந்த இடத்திலிருந்து விலகிச் சென்றனர்.

அவர்களுடனான பேச்சுவார்த்தையால் அவளின் கனத்த மௌனம் உடைக்கப்பட்டு இருந்தது. வெறுமனே இரண்டாம் கட்டானாக இருந்த வானம் போல, அவள் மனமும் வாழ்வு-சாவு இடையே மந்த நிலையை அடைந்து இருந்தது.

திடீரென, “மேடம், என்னைய ஒரு ஃபோட்டோ எடுக்குறீங்களா? என்றக் கேள்வியுடன் குரல் கேட்டது.

அரிவாளின் கூர்மையோடு இருந்த குரலினியாளின் கண்கள், அந்தக் குரல் கேட்ட திசையின் பக்கம் திரும்பியது.

திரும்பிப் பார்த்தால்… மஞ்சள் சட்டை, மஞ்சள் பேண்ட், மஞ்சள் தொப்பி… ஏதோ வாசகங்கள் அடங்கிய பலகை என, நாட்டு மக்களால் “கோமாளி” என அழைக்க அத்தனை தகுதிகளை பெற்ற ஓர் மனிதர் நின்றுக்கொண்டு இருந்தார். அவரைப் பார்த்ததும் பல கேள்விகளும், ஆச்சரியங்களோடும் திகைத்துப் போய் நின்றாள் குரலினியாள்.

ஆச்சரியத்தில் புகைப்படம் எடுத்துத் தருவதற்கு “ம்ம்” என்று தலையும் அசைத்து விட்டாள்.

அவரோ “பின்னாடி இருக்க ரயில்வே ஸ்டேஷன் போர்டு தெரியர மாதிரி எடுங்க மேடம்” என்றார்.

அவர் யார்? ஏன் இப்படி நிற்கிறார்? என பல கேள்விகள் அவரைப் பற்றி எழுந்தன. அவரை பார்த்துக் கேட்கவும் செய்தாள்.

ஏன்? எதற்கு? என்ன காரணம் நீங்க இப்படி மாற? என்றதற்கு… அந்த மனிதர்

“என் பேரு awareness அப்பா. 15 வருஷமா சாலை விபத்துப் பத்தி ஊர் ஊரா சுத்தி நாடு முழுக்க விழிப்புணர்வு பிரச்சாரம் பண்ணிட்டு இருக்கேன். Google-ல என் பெயர் போட்டு பாத்திங்கனாவே, என் மூஞ்சி வரும்ங்க.

என் மனைவி சில வருசத்துக்கு முன்னாடி இறந்துட்டாங்க. இந்த ஊர்ல தான் வேலை செஞ்சிட்டு இருந்தாங்க. எப்போவாச்சும் அவங்க ஞாபகம் வந்துடுச்சுனா, இந்த ஊருக்கு வந்துடுவேனுங்க. நாங்க ரெண்டு பேரும் வந்த ட்ரெயின், உட்கார்ந்து பேசின இடங்கள், கோவில் குளம்னு, ஒரு முறை பாத்துட்டு இருப்பேன்” என்று சொன்னார்.

இமைக்காமல் கேட்டுக் கொண்டு இருந்த குரலினியாளிற்கோ, மேலும் ஆச்சரியம் கூட…

“பசங்க இருக்காங்களா? பணம்? சாப்பாட்டுக்கு எல்லாம் என்ன செய்விங்க?” என மீண்டும் கேள்வி ரயில்களை அவர் முன் ஓட விட்டாள்.

அதற்கு அவர் “புள்ளைங்க யாரும் இல்லைமா. சொத்துப்பத்து வீடுன்னு எல்லாத்தையும் வித்தாச்சு. என் சாப்பாடு, போக்குவரத்து செலவுனு சில நண்பர்கள், நல்லவங்க பாத்துக்குறாங்க. இந்தப் ஃபோட்டோ எல்லாம் அவங்களுக்கு அனுப்பத்தான். அப்படி அனுப்பினா, அதுல எனக்கு ஒரு சந்தோசம்.

இருக்குற வரைக்கும் இப்படி மக்கள் கிட்ட விழிப்புணர்வு, பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருக்கும் போதே ஓர் நாள் செத்துப் போயிரனும்” என்று கூறி, தனக்கு உதவி செய்யும் நபர்கள் மற்றும் அவர்களது அலைபேசி எண்கள் கொண்ட ஸ்டிக்கர்களை அவளிடம் காண்பித்தார்.

யோசனையற்று பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டு இருந்த குரலினியாளை பார்த்த அவர், “ஃபோட்டோ எடுத்ததுக்கு ரொம்ப நன்றி மா.. வாழ்க வளமுடன்” என்று கூறிவிட்டு விழிப்புணர்வு பலகையோடு நகர்ந்தார்.

இரண்டாம் கட்டமான வானிலையில் இருந்த வானம், வண்ணம் மாற்றி இருளடைந்தது.

குரலினியாளும் எண்ணம் மாறி வீடு திரும்பினாள்.

– கதைப் படிக்கலாம் – 72

இதையும் படியுங்கள் : பூவும் பொட்டும்

Exit mobile version