ஆட்டுக்குட்டி

– ஆர். ஜெயசீலன்

விஷயம் கேள்விப்பட்ட இரண்டு நாட்களாகவே, ஆட்டுக்குட்டி மனது அல்லாடிக்கொண்டிருந்தது. சின்ன வயசில இருந்து வயற்காட்டிலும், வரப்பிலும்… வெள்ளையனோடு ஓடி ஆடி விளையாண்டதும்… ஆற்றிலும், குளத்திலும் அவனைக் குளிப்பாட்டும் போது, வெள்ளையன் வாலைப் பிடித்துக்கொண்டு, அவன் ஆற்றில் வேகமாக நீந்தும் போது… ஆட்டுக்குட்டியும் அவன் வேகத்திற்கு நீந்தியதும்… கண்ணில் நிழலாக ஆடியபோது… ஆட்டுக்குட்டிக்கு  அவனையுமறியாமல் கண்ணீர் வந்தது.

ஆட்டுக்குட்டியைப் பொறுத்த வரையில், வெள்ளையன் என்பது மாடு அல்ல… அவனோடு கூடப்பிறந்த சகோதரன் போல.. சின்ன வயதிலேயே தன் தகப்பன் இறந்தப்பிறகு, படிப்பைப் பாதியில் கைவிட்டு, குடும்பக் கஷ்டத்திற்காக அவன் அப்பன் வேலைப்பார்த்த முதலாளி வீட்டிலேயே வேலைக்குச் சேர்ந்து, அங்குள்ள ஆடு மாடுகளை குளிப்பாட்டி… தீனிப்போட்டு… மேய்த்து… மாலையில் கொட்டிலில் கட்டும் பிராதான பொறுப்பு இவனது வேலை.  வெளிப்படையாகச் சொன்னால், மாட்டுக்காரன் வேலை.

சொந்தப் பெயர் கோபால் என்றாலும், ஒரு சமயம் முதலாளி வீட்டு ஆட்டுக்குட்டி கிணற்றில் விழுந்தப்போது… இவன் துணிச்சலாக இறங்கி அதைக் காப்பாற்றியதால்… அன்றிலிருந்து இவனது கோபால் என்றப் பெயர் திரிந்து, இவனுக்கு ஆட்டுக்குட்டி என்றப் பெயரே நிலைத்து விட்டது. எல்லோரும் இவனை “ஆட்டுகுட்டி” என்றே அழைக்க தொடங்கிவிட்டார்கள்.

ஆரம்பத்தில் கோபாலுக்கு இந்தப் பெயர் பிடிக்கவில்லையென்றாலும், அவன் வளர்க்கும் ஆடு மாடுகள் எல்லாம் இவனிடம் காட்டிய பாசத்தில் “சரி, தானும் இவைகளில் ஒன்று எனவும்.. தனக்கு இந்தப் பெயர் சரிதான்..” என்றும் அவன் மனது ஒத்துப்போனது.

ஆடு மாடுகளிடம் அன்பாக இருப்பவன் என்றாலும், இந்த வெள்ளைக் காளை மாட்டிடம் மட்டும், அவன் அலாதி அன்பாய் இருப்பான்.   காரணம், இது மட்டும் அங்கேயே இருந்து வளர்ந்த பசுவிடம் பிறந்தது. பிறந்தது முதல் அதை பார்த்துக் கொண்டிருப்பதாலும், வளர்ப்பதாலும், தானாகவே அதன் மீது இவனுக்கு பாசம் அதிகரித்தது. மற்ற மாடு கன்றுகளை விட, இதன் மீது அளவுக்கதிகமான பாசத்தைக் காட்டி வளர்த்தான்.

அது வெள்ளையாக இருந்ததால், அவன் அதை “வெள்ளையன்” என்றே பெயரிட்டு அழைத்தான். முதலாளிக்கும் அந்தப் பெயர் பிடித்துப்போனதால், அவர் உட்பட அங்கு வேலைப் பார்த்த எல்லோருமே, அதை வெள்ளையன் என்றுதான் அழைத்தார்கள். எங்கு  மேய்ந்துக் கொண்டிருந்தாலும், “வெள்ளையா…” என்று அழைத்தால்  போதும், ஓடி வந்து அவனிடம் நின்று… அவனை நாவால் நக்கி… தன்  அன்பை வெளிப்படுத்தும்.

கன்றாக அவன் வளர்த்த வெள்ளையன், இந்தப் பத்து வருடத்தில் நல்ல வாட்டம் சாட்டமாக வளர்ந்திருந்தது போலவே, ஆட்டுக்குட்டியும் வாலிபனாக வளர்ந்திருந்தான். பருவம் வந்ததும்  உழவுக்கும் வண்டிக்கும் அதைப் பழக்கும் பொருட்டு, கால்நடை மருத்துவரை அழைத்து வந்து, வெள்ளையனுக்கு ஆண்மை நீக்குவதற்காக, அதன் விதைகளை அவர் கொண்டு வந்த கிடுக்கியால் நசுக்கிய போது, விழி பிதுங்கிய அதன் வேதனையின் கண்ணீரையும்,   முனகலையும் பார்த்துக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டி, “ஓ… வென அலறி, மருத்துவர் காலில் விழுந்து, என் வெள்ளையனை விட்டுடுங்க…” என்று கெஞ்சியதை இன்று நினைத்தாலும், அவனுக்குக் குலை நடுங்கியது.

ஒரு வழியாக, அந்த வீக்கத்திற்கும் வலிக்கும்… மஞ்சள் பத்து, மருந்து எனப் போட்டு… கண்ணும் கருத்துமாக அதைக் கவனித்து, குணமான பின் ஒரு நள்ள நாளில், அதை வண்டியில் பூட்டி பழக்கியதை, அவனால் மறக்க முடியாத நாள். வெள்ளையன் வண்டிக்கு மட்டுமில்லாமல், வயற்காட்டில் உழுவதிலும் கை தேர்ந்தவனாக மாறினான். இருபது மூட்டை நெல்லை வைத்து வண்டியில் இழுப்பதாக இருந்தாலும் சரி, இழுத்துக் கொண்டு வேகமாக ஓடுவதனாலும் சரி, வெள்ளையனை யாரும் மிஞ்ச முடியாது என்ற நிலைக்கு அவனைத் தயார் செய்திருந்தான், ஆட்டுக்குட்டி.

தனக்கு சாப்பாடு இருக்கோ இல்லையோ, வெள்ளையனுக்கு முறையாக தீனி போட மட்டும் தவறமாட்டான், ஆட்டுக்குட்டி.  வஞ்சனையில்லாமல் உழைத்த வெள்ளையன், ஒரு நாள் வண்டியில் மூட்டை ஏற்றி வரும் போது, வண்டிப்பாதை ஓரமாக அருகில் வளர்ந்திருந்த ஒரு நாட்டுக் கருவை முள், அவன் கண்களில் மின்னல் வேகத்தில் பாய்ந்தது. அன்று முதல் வெள்ளையன் வேலையில் சுணக்கம் ஏற்பட்டது. கண்ணில் தண்ணீர் வடிதல், பீழை தள்ளுதல், வீக்கம் என்று, மாறி மாறி அவனுக்கு தொல்லை வந்துக் கொண்டிருந்தது. கால்நடை மருத்துவர்கள், நாட்டு மருத்துவர்கள் என யார் யாரோ வைத்தியம் பார்த்தும் பலன் ஒன்றும் இல்லை. சிறிது சிறிதாக ஆறுமாதத்தில், வெள்ளையனுக்கு ஒரு கண் பார்வை முற்றிலும் பறி போனது.

அதன் பிறகு, வண்டியில் ஏற்றினாலோ, உழவில் பூட்டினாலோ, முன்பு போல் வேலை செய்யாமல், சுணங்கிக் கொண்டு படுத்து விடுவான். ஆட்டுக்குட்டி என்னென்னமோ நாட்டு சிகிச்சை முறைகளெல்லாம் செய்துப் பார்த்தான்… ஒன்றும் பலனில்லை. இனி வெள்ளையன் வேலைக்கு ஆகமாட்டான் என்று, முதலாளி முடிவுக்கு வந்து விட்டார்.. முடியாத மாட்டை வைத்திருந்து என்ன பிரயோசனம் என்ற நினைப்பில், தரகு தம்புசாமியடம் சொல்லி, வெள்ளையனை அடிமாட்டுக்கு விற்க துணிந்த செய்திக் கேட்டுதான், ஆட்டுக்குட்டி மனது அல்லாடிக்கொண்டிருந்தது.

வெள்ளையனைப்பற்றிய நினைவுகள், ஆட்டுக்குட்டியின் மனதில் திரையாக ஓடிக் கொண்டிருந்தது.

எப்படியெல்லாம் உழைத்தவன்… அவனைப்போய்  அடிமாட்டுக்காரனிடம் விற்க முதலாளிக்கு எப்படி மனசு வந்தது. வாட்ட சாட்டமாக வளர்ந்த அவனை, கறிக்காக வித்து… வாங்கியவன் அதை தலையில் அடித்து… உடம்பை நாறுநாறாக கிழித்து… அதை மாமிசமாக விற்கும் நிலையை நினைத்தாலே… ஆட்டுக்குட்டிக்கு மனசு நடுங்கி, என்ன செய்வதென்ற குழப்பத்தில் இருந்தவன், நேராக முதலாளியிடம் சென்றான்.

ஆட்டுக்குட்டியைப் பார்த்த முதலாளி, “வாடா ஆட்டுக்குட்டி.. எங்கடா ஆள காணோம். நாளைக்கு நம்ம தரகு தம்புசாமியிடம் சொல்லி, நம்ம வெள்ளையனை அடிமாட்டுக்கு விக்கிறதா முடிவு பண்ணிட்டேன்….  நம்ம கருப்பனுக்கு சோடியா, வேற மாட்டப் பார்க்கச் சொல்லியிருக்கேன். நீ நம்ம வெள்ளையனை பழக்குன மாதிரி, அதையும் நல்லா வேலைக்கு பழக்கிவிடுடா.. என்று எந்தவித உணர்வுமின்றி எளிதாக சொல்லி விட்டு நகர்ந்த முதலாளியிடம்,    “ஐயா நான் ஒன்னு சொன்னா தப்பா நெனக்க மாட்டீங்களே..” என்றவனிடம் “என்னடா ஆட்டுக்குட்டி, சும்மா சொல்லுடா…” என்றார்.

“ஐயா நம்ம வெள்ளையன வித்தா எவ்வளவு காசு கொடுப்பாங்க..”

“என்ன வேலைக்கு ஆவாத மாடு, ஒரு ரெண்டாயிரம் கொடுப்பானுங்க..” மனசாட்சியே இல்லாமல்… இதுவரை வெள்ளையன் செய்த உழைப்பையும், நன்றியையும் மறந்துவிட்டு… அலட்சியமாகக் கூறினார்.

“ஐயா நம்ம வெள்ளையன் நமக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறான். அவனுக்கு முடியலங்கறதுக்காக, இப்படி அடிமாட்டுக்காரங்கிட்ட விக்கிறது என்னய்யா நியாயாம். மனுஷங்கள்ல யாருக்கும் ஓடம்புக்கு முடியாம போயிட்டா, அவங்கள என்ன நாம வித்தா புடுறோம்….” ஆட்டுக்குட்டியின் கேள்வியில் சற்று யோசித்த முதலாளி, “டேய் ஆட்டுக்குட்டி, மனுஷன் வேற, மாடு வேற, நீ புரியாம பேசுறடா…”

“இல்லீங்க ஐயா, நான் புரிஞ்சுதான் பேசுறேன்..” என்றவனை, ஒரு மாதிரியாகப் பார்த்தார் முதலாளி. “ஆமாங்க ஐயா, வெள்ளையன் உங்களுக்கு வேணும்னா மாடா தெரியலாம்… ஆனா என்ன பொறுத்த வரைக்கும், அவன் என் கூடப் பொறக்காத தம்பி மாதிரி… அவன அடிமாட்டுக்கு வித்துட்டு, என்னால இருக்க முடியாதுய்யா..”

“முதலாளிக்கு கோபமாக வந்தது… தன் வீட்டு மாட்ட விக்கிறதுக்கு, இவன் என்ன நமக்கு புத்தி சொல்ல வர்றான் என நினைத்து, ஆட்டுக்குட்டியின் மீது முதலாளிக்கு கோபமாக வந்தது. இருந்தாலும் சின்ன வயசுலேர்ந்து தன் வீட்டிலேயே வளர்ந்து, ஆடு மாடுகளோடு பழகியவன் என்பதால் சற்று பொறுத்துக்கொண்டு, “இப்ப என்னதாண்டா செல்ல வர்ற…” முதலாளி கோபமாகக் கேட்டார்.

ஐயா, நான் வேலை செய்யுற சம்பள பணத்துல, கொஞ்சம் கொஞ்சம்மா எடுத்துக்குங்க. அதுக்குப் பதிலா வெள்ளையனை என்கிட்ட கொடுத்துடுங்க… நான் பார்த்துக்குறேன்… என்ற ஆட்டுக்குட்டியை, வியப்பாக பார்த்த முதலாளி, என்னடா சொல்ற ஆட்டுக்குட்டி “ஆமாங்க, நமக்காக காலம் நேரம் பார்க்காம உழைச்ச நம்ம வெள்ளையனை, நீங்க அடி மாட்டுக்கு விக்க வேணாங்க… கண்ணுப் போன அவன நான் வீட்டுல வச்சி, காலம் பூரா காப்பாத்துறேனுங்க..” என்று கண்ணீர் வடித்த ஆட்டுக்குட்டியின் பாசத்தில், மிரண்டு போனார் முதலாளி..

– கதைப் படிக்கலாம் – 26

இதையும் படியுங்கள்வரப்புயர

Exit mobile version