“மனமே திருந்து”

– முத்து வேதா
woman
lonely
nature
lake

ஒரு ஞாயிற்றுக்கிழமை வீட்டில் எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்க, தூக்கம் வராமல் எப்பொழுதும் போல அதிகாலையில் எழுந்து காபி போட்டுக்கொண்டு, செய்தித்தாள் படிப்பதற்காக போர்டிகோவில் வந்து உட்கார்ந்தாள் தேவி. செய்தித்தாளில் மனைவி வெட்டிக்கொலை, விவாகரத்து கேட்டு போராட்டம் என செய்திகளைப் படிக்க படிக்க, தன்னுடைய இருபது ஆண்டு கால திருமண வாழ்க்கையை எண்ணிப்பார்க்கத் தொடங்கினாள்.

இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகளுடன் பிறந்த கடைக்குட்டி ராகவனுக்கு, தேவியின் அப்பா தேவியை திருமணம் செய்து கொடுத்தார். திருமணம் முடிந்து ஒருவருக்கு ஒருவர் மனம்விட்டு பேசும்பொழுது ராகவன் தேவியிடம், “இதோ பார்! எங்க வீட்டில் எல்லா ஆண்களும், பெண்களின் கையில். ஆதலால், நீ என் பேச்சைத்தான் கேட்க வேண்டும். ஒரு வார்த்தை எதிர்த்து பேசக்கூடாது. நான் மனைவிக்கு அடங்காதவன் என்று நிரூபிக்க வேண்டும்” என்று கூறியபொழுது மிரண்டேபோனாள் தேவி.

இதற்காக திருமணம் முடிந்த ஒரு வாரத்திற்குப் பின், தனது மூத்த அண்ணியின் முன்னால் ஒன்றுமில்லாத காரணத்திற்காக கோபப்பட்டு, தன்னை ராகவன் அடித்ததைக் கண்டு கலங்கிப்போனாள். நாட்கள் செல்லச் செல்ல தன்னை புரிந்துக்கொள்வார் என நினைத்த தேவியின் நம்பிக்கையில் பேரிடிதான் விழுந்தது.

ஆஸ்திக்கு ஒரு மகனும், ஆசைக்கு ஒரு மகளும் என இரண்டு குழந்தைகளுக்குத் தாயானாள். குழந்தைகளுக்கு “காய்ச்சல், வயிற்றுவலி என உடல்நலம் சரியில்லாமல் போனால், உன் அம்மா வீட்டிற்கு சென்று வந்தாயல்லவா, அதனால்தான் என்றும், அல்லது குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதைத் தவிர உனக்கென்ன வேலை” என்ற திட்டும் கிடைக்கும். இதனால் தேவி பிறந்த வீட்டிற்கு செல்வதையே நிறுத்திக்கொண்டாள்.

ராகவனனின் சகோதரிகள் வீட்டில் “கல்யாணம் என்றாலும் சரி; காரியம் என்றாலும் சரி” தேவி, ராகவனிடம் கூறி ஒரு குறையுமில்லாமல் சீர்வரிசைகளை செய்வாள். ஆனால் அவர்களுக்கோ ஆசையாய் வா என்று அழைக்கக்கூட மனமிருக்காது. ஏனெனில் ராகவனின் வீட்டில் உள்ள அனைவருக்கும் “தேவி, ராகவன் என்ன சொன்னாலும் கேட்பாள்” என்ற எண்ணம் தான். “ராகவன் பின்னால் தேவி நிற்பாள்” என்ற நம்பிக்கையும் தான்.

இதற்கு காரணம், தேவியின் பெற்றோர் தான். “திருமணத்திற்கு முன்னும் சரி; பின்னும் சரி; எப்போதும் சொல்வது என்னவென்றால், புகுந்த வீட்டில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்கவேண்டும்; புகுந்த வீட்டுப்பெண்கள் கண்ணீர் சிந்தக்கூடாது” என்பதுதான். இதனால் அடிக்கடி தேவி பெற்றோரிடம், “இப்படிக் கூறி கூறித்தான் நான் எதையும் பேசமுடியாமல் தவிக்கிறேன்” என சண்டை போடுவதுண்டு.

இந்த இருபது வருட இல்லற வாழ்வில், ராகவன் தேவியை  ஒருமுறை கூட பெயர் சொல்லிக் கூப்பிட்டது கிடையாது. “ஏய்” என்று தான் தேவியை அழைப்பான் ராகவன். மனைவியை பெயர் சொல்லிக் கூப்பிடலாமே என்று யாராவது கூறினால், மனைவியை பெயர் சொல்லிக் கூப்பிட்ட என் நண்பர்கள் எல்லாரும், இப்பொழுது அவர்கள் மனைவிக்கு அடிமைகள் என்பான் ராகவன்.

மகனும், மகளும் வளர்ந்துவிட்ட நிலையில், தேவிக்கு ஏற்படும் கேவலங்களைப் பார்த்து மனம் வருந்துகிறார்கள், சில நேரங்களில் கோபப்படவும் செய்கிறார்கள். ஒருநாள் ராகவன் காரணமே இல்லாமல் தேவியை சத்தம் போட்டதைப் பார்த்து “என்னம்மா! உங்கள் மேல் தப்பே இல்லை. ஏன் அப்பாவை எதிர்த்துப்பேச மாட்டேங்கிறேங்க” என மகன் தேவியை பார்த்துக் கேட்டபொழுது… தேவி, “இதோ பார்! ஒருவர் கோபமாக இருக்கும்பொழுது மற்றொருவர் பொறுமையாக இருக்க வேண்டும். இன்னொன்று பிள்ளைகள் முன்னால் சண்டை போடுவது தவறு” என மகனிடம் கூறியபொழுது, “அப்ப சாகும்வரை அடிமை வாழ்க்கை தான் உங்களுக்கு அம்மா” எனக் கூறியதைக் கேட்டு ஆடிபோனாள் தேவி. மகன் பேசியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும் ராகவனை நினைத்துப்பார்த்தாள்.

இளம்வயதில் ராகவன் வீட்டில் நடந்த சம்பவங்கள் அவன் மனதில் ஒரு வடுவை உருவாக்கியதே தவிர, மற்றப்படி ராகவனிடம் வேறு எந்தக் குறையுமில்லை. தனியனாக, தானே வேலை பார்த்து, படித்து, சொந்த முயற்சியில் வாழ்க்கையில் முன்னேறி, பெரிய பதவியை அடைந்துள்ளான் ராகவன். ராகவன்-தேவி இருவரும் ஜோடியாக எங்கு சென்றாலும் அன்பு, பாசம், மரியாதை எல்லாம் கிடைக்கும். “கண்ணுபடப் போகிறது, திருஷ்டி சுற்றிப் போடுங்கள்” என்பர் உறவினர்கள். “சொந்த வீடு, வருடம்தோறும் சுற்றுலா, நினைத்தவுடன் ஷாப்பிங்” என்று தேவியின் வாழ்க்கை ராஜ வாழ்க்கை தான். இதைவிட என்னவேண்டும் என்று மற்றவர்கள் நினைக்கத் தோன்றும் வாழ்க்கை தான் வாழ்கிறாள் தேவி.

எவ்வளவு பெரிய ராணி வாழ்க்கை வாழ்ந்தாலும், அவள் மனதில் நினைத்ததை ராகவன் புரிந்துக்கொள்ளும் காலம் எப்பொழுது வருமோ! அவள் கணவன் என்று தான் மாறுவானோ? தேவியை போலவும், ராகவனைப்போலவும் பூமியில் வாழ்ந்துக் கொண்டிருப்பவர் எத்தனை பேரோ! அவர்கள் மனமும் திருந்த வேண்டும் என்று தேவியின் எண்ணவோட்டம் ஒடிக்கொண்டிருக்கும் பொழுதே “அம்மா! நான் தான் உங்களுக்குப் பிறகு எழுந்துவிட்டேன்” எனக் கூறி ஓடிவந்து மகள் கட்டியணைத்ததுமே, தனது இயல்பு வாழ்க்கைக்கு வந்துவிட்டாள் தேவி. இனி தூங்கப்போகும் வரை வீட்டில் வேலைகளைச் செய்துக்கொண்டே இருப்பாள் தேவி.

பெண்கள் பிறந்த வீட்டையும், புகுந்த வீட்டையும் இரண்டு கண்களாக பார்க்கவேண்டும் என்பதே தேவியின் வாழ்க்கையில் நாம் அனைவரும் கற்றுக்கொள்ளும் பாடம்.

– கதைப் படிக்கலாம் – 146

Exit mobile version