– எம். எம். தீன்

“அப்பா, அதான் பேராசிரியர் மாலையப்பன் பெரூசா என்கொன்னும் கஷ்டம் கொடுக்கல. கெடையிலயும் கெடக்கலை. யாருக்கும் எந்தச் சங்கடமும் கொடுக்காமெ பூப்போல உதிர்ந்துப் போயிட்டாங்க.
ஒரேயொரு சங்கடம் எனக்குத்தான். எல்லாம் படுக்கையிலேன்னு ஆனப் பிறவாவது, உங்கள்ள ஒருத்தராவது ஓடி வந்து நேர்ல பாத்திருக்கலாம். அதுசரி உங்க வேல சோலி அப்பிடி. போட்டது போட்டபடி ஓடி வர்ற வேலையா என்ன? சரி. தூக்கிட்டு போறதுக்காவது வந்துட்டீங்களே. சந்தோசந்தான்.
என்ன இருந்தாலும் புள்ளயொ முன்னுக்கு நின்னு செஞ்சமாரி இருக்குமா? அதுதான் உங்கள இழுத்துட்டு வந்துடுச்சி. சிரிச்ச வாழ்வும் சிங்காரியுமா போய் சேந்துட்டாங்க.
அதெ ஏம்பா கேக்குறீங்க, சாகுறதுக்கு ரெண்டு நிமிசம் முன்னாடி கடைசியா, சிரிப்போடு என்னப் பாத்துக்கிட்டே இருந்தாங்க.
வாயிலும் மூக்கிலும் கட்டியா மஞ்சளா துண்டு துண்டா சளி வந்துச்சி. நல்லா மூக்குத் தண்டை அழுத்திவிட்டு அம்புட்டு சளியையயும் எடுத்தேன். வாயெக் காறச் சொன்னேன். குபுக்குன்னு கட்டியா இருந்த சளி பந்து போல உருண்டையா வெளியே வந்துச்சி. கையால வழிச்சி எடுத்தேன். அப்பாவோட மூச்சிக்குழல்கள் திறந்து நிம்மதியாகி முகம் பூத்தது போல இருந்தது. நான் சொகமா இருக்கான்னு கேட்டேன். தலையை அசைத்து ஆமான்னுச்சி. அப்பாவுக்கு எப்போதும் சிரிச்சிக்கிட்டே இருக்கணும். கடைசி வரைக்கும் அது குறையவே இல்லை.
நான் கொஞ்சம் இருங்கப்பா, சளியெ வெளியப் போட்டுட்டு வாரேன்னு சொல்லிட்டு போனேன்னா, போற வழியெச் சொல்லாமெ பறந்துப் போயிட்டாங்க. திரும்பி வரதுக்குள்ளே என்ன அவசரமோ போயிட்டாங்க.
மூணுபேரும் மூணு மூலயில இருக்கீங்க. எப்படி வரப்போறீங்கன்னு நெனச்சேன். எல்லாரும் உடனே கார்லயே வந்துட்டது ரொம்ப மகிழ்ச்சியா போயிட்டு. நேத்தைக்கு நல்லமாரியா சுடுகாட்டுக்குக் கொண்டு போயி, மின்தகன மேடையில எரிச்சி அஸ்தியையும் கையோடு வாங்கி கரச்சிட்டு, அப்பா காரியங்கள முடிச்சிட்டு வந்தீட்டீங்க. ஆனா இப்ப ஒங்களுக்கு புதுக் கவலை வந்திருக்கு.
நேத்தைக்கு சாமியானா பந்தல்ல நீங்க இருக்கும்போது, அப்போவோட தோழர்கள், நண்பர்கள், மாணவங்க எல்லோரும் வந்தாங்க. ஒங்கள்ட்ட பேசிக்கிட்டு இருந்திருப்பாங்க. அவுங்க எல்லாரும் என்னப் பத்தியே பேசிக்கிட்டு இருந்ததா… ஏன் தம்பி வேலு ராத்திரியே எங்கிட்டே வந்து சொன்னான்.
மங்களசாமி தோழர் ஏதாச்சும் சொல்லியிருப்பாரே. என்ன மாரி எந்த பொம்பளையும் தான் புருசனை பார்க்க முடியாதுன்னு சொல்லியிருப்பாரே. கடந்த அஞ்சு வருசமா என்னமோ நான் அப்பாவெ பச்சப்புள்ளையா பாத்துக் கிட்டேன்னு சொன்னாரா. அப்டில்லாம் நான் ஒண்ணும் பெரூசா செஞ்சிரல.
தூங்குறதுக்கு முன்பா பால்ல சுக்கு, மிளகு, மஞ்சள் பொடி போட்டுக் கேட்டாக. பெறகுதான் ஒண்ணுக்கு இருக்கப் போவாக. அதுக்குப் பிறகு கொஞ்சம் வெந்நீர் கொடுக்கணும். ராத்திரி ரெண்டு மூணு தடவ ஒண்ணுக்குப் போவாக. அவுங்களே போய்ட்டு வந்துட்டுதான் இருந்தாங்க. இப்ப ஆறுமாசமாத்தான் மூத்திரக்குடுவையில இருந்தாங்க. நான் எந்திரிச்சு, அப்பப்ப கொட்டிட்டு கழுவி வச்சிருவென். பத்து நாளாத்தான் அவுங்களால எந்திரிக்க முடியல. கெடையில போச்சு. நல்லவேளை பக்கத்து வூட்டு தம்பி பேம்பர்ஸ் வாங்கிட்டு வந்து எங்கூட இருந்து மாட்டி விட்டுட்டு போவான். அது கொஞ்சம் வேலயெக் குறைச்சிட்டு. ஒரு நாளு வடை போட்டு கொடுத்தேனா. ஒரு துண்டோ ரெண்டோ தான் சாப்டாங்க. சாப்பிட்டுட்டு சூப்பர்னு சொல்லிட்டு சிரிச்சாங்க. எப்பவும் போல விரல்லால சைகையில வேற சொன்னாங்க.
போனவாரம் மங்களசாமி தோழர் வந்தப்போது இதெச் சொன்னேன், அதெக் கேட்டுக்கிட்டே இருந்த அப்பா அவரப் பாத்தும் கையைத் தூக்கி காமிச்சி சிரிச்சாங்க. அவுரு சத்தம் போட்டு சிரிச்சாரு. அதெ மௌனமா பாத்துக்கிட்டே இருந்தாங்க அப்பா. மங்களசாமி தோழர் மட்டுமில்ல, அவரைப் போல பலபேர் வருவாங்க. பேராசிரியர்கள், அவரோட மாணவர்கள், அப்பாவைப் போல எண்ணம் கொண்டவர்கள் எல்லாரும் வருவாங்க. அவுங்களுக்கு டீன்னா, இல்லன்னா காபி, ஜூஸ் என ஏதாவது போட்டுக் கொடுப்பேன். அப்பாவின் குரல் வருவதற்கு முன்பே போட ஆரம்பித்து விடுவேன். அப்பா எப்போதும் டீ குடிச்சப்புறம் “கண்ணு, கிரீன் டீ இல்லாட்டி மல்லிக்காப்பி போடேன்” என்றுதான் சொல்வார்கள். இது தெரிஞ்சே ரெண்டுல ஏதாவது ஒண்ணு ஏற்கனவே போட்டு வச்சிருப்பேன். கேட்டவுடன் கண்ணாடி டம்ளரில் ஊத்திக் கொண்டு வருவேனா, வந்தவங்களுக்கு ஆச்சரியமா போயிடும், அதெப்படி சொன்னவுடனே போட்டுக் கொண்டு வந்திட்டீங்க என்பார்கள். நா சிரிச்ச மானிக்கி பதில் சொல்லாமல் உள்ளே போய் விடுவேன்.
அப்பாவுக்கும் மேஜிக் காட்டுனது போல மகிழ்ச்சியா இருக்கும். நானு கொஞ்சம் சமையல் செய்யுறதுல ஸ்பீடுதானே. ஆச்சரியமும் சுவையும் சேர்ந்து கொண்டு வந்தவர்களைப் பேச வைக்கும். நான் வீட்டுக்குள் நின்று கேட்டபடி இருப்பேன். வர்றவங்க எல்லாம் லேசுபட்ட ஆளுகளா என்ன, எல்லாரும் ஒவ்வொரு வகையில சிறப்பானவங்க. அவுங்க அப்பாவோட பேசிட்டு போறத பெருமையா நெனச்சி வாராங்க. அவுங்கள நல்லபடியா கவனிச்சா நாமொ என்ன கொறஞ்சா போயிருவோம்னு கவனிச்சேன். அப்பாக்கும் அதுல பெரீய மகிழ்ச்சி.
வர்றவங்க எல்லாரும் எம்புட்டு பெரிய ஆட்கள் தெரியுமா. மங்களசாமி அண்ணனல்லாம் கட்சிக்காக தன்னோட சொத்தையெல்லாம் இழந்துட்டு கட்சிக்கின்னே வாழுறவரு. அதெப் போல பெரிய பெரிய கல்லூரி ஆசிரியர் எல்லாம் சங்க இலக்கியம். ஆதிச்சநல்லூர் ஆய்வு அது இதுன்னு பேசும் போது நமக்கே திகைப்பா இருக்கும்.
அவுகள மாரி பெரியவங்கள்ளாம் வர்ற போது எனக்கு கூந்தகுளந்துல வெளிநாட்டு பறவைகள் தூரா தொலைவிலிருந்து வந்து குஞ்சு பொறிக்கிறதுக்காக குச்சிய வாயில கவ்விக்கிட்டு பறந்து போகுமே, அது மாரா இவுங்கள்ளாம் பெரிய பெரிய விசயங்களயெல்லாம் சுமந்துகிட்டு வர்றமாரி இருக்கும். அபூர்வ பறவைகளாத்தான் தோணும். அவுங்கள நாமெத்தான் கவனிக்கணும். அதுபோல படிக்கிற புள்ளய வந்தாலும், நம்ம வூட்டு கோழிக்குஞ்சு போல நினைப்பேன். அவங்க வயிறும், மனமும் நிறைஞ்சி போவணும். எல்லாம் செஞ்சு கொடுப்பேனா, எல்லாரும் என்ன கண்ணு சித்தி, கண்ணு சித்தின்னு கூப்பிட ஆரம்பிச்சி, பெரியவங்கள்ள இருந்து சின்ன புள்ள வரைக்கும் நா கண்ணு சித்தியாயிட்டேன். எல்லா முறையும் கூட காணாமெப் போயிட்டுது. பாட்டி, அத்தைன்னு யாரும் கூப்பிடலயேன்னு முதல்ல கொஞ்சம் அரிச்சலா இருந்தது. நமக்கு மக்கள் எல்லாரும் கொடுத்த பெயரா நெனச்சிக்கிட்டேன். இப்ப அப்படிக் கூப்பிட்டத்தான் மகிழ்ச்சியா இருக்கு.
செரி, அந்தக் கதெயெல்லாம் இப்ப எதுக்கு. நீங்க நல்லமாரியா வந்து அப்பாவோட கருமாதி காரியங்களெ செஞ்சிட்டீங்க. அப்பாவும் கருமாதிக்கு காசு செலவழிக்கிறதுக்கு பதிலா, ஏழை எளியதுக்கு அந்தப் பணத்த செலவழிங்கன்னுதான் உயில்ல எழுதி வச்சிருக்காக.
அப்பா நெனச்சிருந்தா நெறயா சொத்து வாங்கி குவிச்சிருக்கலாம். அம்புட்டு பணம் வயல்ல இருந்தும், தோட்டத்துல இருந்தும் வந்திச்சி. ஆனா அவுங்க அதெ விரும்பல. நல்ல காரியம்னு யாரு கேட்டு வந்தாலும் கொடுத்திடுவாங்க. ஏதோ நா கட்டாயப்படுத்துனதால அந்த ஹவுசிங் போர்டு வீடு, நரிபத்து காடு வாங்குனாங்க. டவுண்ல இருக்க பழைய வீட்ட இடிச்சிட்டு மேலயும் கீழயுமா ரெண்டு வீட்ட கட்டுனாக. அதுல வர்ற வாடகையும் அவுக கட்சிக்குன்னு கொடுத்திடுவாக. இப்ப கொஞ்சம் சொத்து இருக்குதான். எல்லாத்தையும் சேத்தா உருப்படியா சொல்ற அளவுக்கு உள்ள சொத்துதான்.
அதுக்காக அஸ்தியெக் கரைச்ச கையோட சொத்து பேசி முடிக்கணும்னு சொன்னது கொஞ்சம் சங்கடமா இருக்கு. அப்படி என்ன அவசரோம்னு எனக்கு தெரியல. எல்லாரும் நல்லா வீடு, வசதி, காரோடுதான் இருக்கீங்க. இப்ப என்ன அவசியத்துக்கு சொத்த பிரிச்சிப் போடணும்னு எனக்கு தெரியல. அதான் பாத்தேன். விவகாரம் பேசும் போது சித்தப்பாவும், பெரியப்பாவும் கூட இருக்கட்டும்னு நான்தான் வரச் சொன்னேன். அவுங்களுக்கும் தெரியணும்லா. நாமொ பேசினதுக்கு சாட்சி இல்லாமெ போயிரக் கூடாது, என்னா நா சொல்றது சரிதானே.
நீங்க வந்ததிலேர்ந்து ஒருத்தரு முகம் ஒருத்தரும் பாக்காமெ கம்முன்னு அலையறதப் பாத்தா, சொத்துபத்துல என்ன கெடைக்கப் போவுதோங்கிற கவலையில இருக்கிற மாதிரி தெரியுது. அப்பா அப்படி ஒண்ணும் தெரியாதவர் இல்ல. யார்யாருக்கு என்னென்ன சொத்து கொடுக்கணும்னு தெளிவா உயில் எழுதி வச்சிட்டு போயிருக்கார். அதுல மங்களசாமி தோழரும், அருணாசலம் பேராசிரியரும்தான் சாட்சி கையெழுத்துப் போட்டிருக்காங்க. அவுங்கள்ட்ட நீங்க எப்ப வேணாலும் போயி கேட்டுக்கிடலாம். அதுனால சொத்துக்களெ எப்படி பிரிச்சிக்கிடணுங்கிற பிரச்சனையே இல்ல.
வீட்ட எங்காலத்துக்கு பொறவு மூத்தவனுக்கு போவணும்னு எழுதியாச்சி. அதுலயும் சொத்தப் பிரிக்கிற வேலை இல்ல.
என்ன எல்லோரும் கம்முன்னு இருக்கீங்க. என்ன அத்தான் சொல்றியெ, உங்கத் தம்பியே பிரிச்ச பிறவு நாம பிரிக்கணுமா. ஏங்கிட்டே உங்க தம்பி உயிலோட அசல கொடுத்துட்டு காப்பி எடுத்து அவுங்க ரெண்டு பேர்ட்டயும் கொடுத்திருக்காங்க. அவங்கள்ட்டயும் எங்கிட்டயும் இருக்க உயில படிச்சிக்கிலாம். வேணுன்னா ஜெராக்ஸும் எடுத்துக்கிடலாம்.
மேக்கொண்டு பேசுறதுக்கு என்ன இருக்கு. என்னா, நானும் பாத்துக்கிட்டே இருக்கேன். என்னா எல்லாரும் உம்முன்னு இருக்கீங்க, சரி சரி விளங்குது, அப்பாவோட தங்கை சுமதி அத்தை அழுதுக்கிட்டு கெடக்கு, அது நேத்து சின்னவன்ட பேசுனது எனக்கும் கேட்டுது. ‘உடப்பிறந்தாரு போயிட்ட்டாரு. இனி யாரு கவனிக்கப் போறான்னு, ஏன் நீங்க இல்லியா, நானில்லயா கவனிச்சுக்க. அது பாட்டுக்கு எதையாவது சொல்லிட்டுப் போவுது. அண்ணனும், அண்ணியும் அப்டி அன்னியோன்யமா இருந்தாங்க. இனிமெ அண்ணியோட கதெ ரொம்ப நாளைக்கு ஓடாது. நீங்க யாராவது கூட்டிட்டுப் போயி நல்லா பாத்துக்குங்கப்பான்னு சொல்லி அழுதிச்சா. அதுக்கும் வேலயில்ல, அது அழுவைக்கும் வேலயில்ல. இந்தாப் பாருங்க சுமதி அத்தை, எப்ப அவெ புருசன விட்டுட்டு வந்திச்சோ, அன்னிலேர்ந்து இங்கதான் இருக்கு. என்ன கூட்டிட்டு போயிருவீங்க, அது எங்க போவப் போவுதுன்னு முதல்ல முடிவு பண்ணுங்க.
இதுல ஊர்நாட்டமை வேற சொல்லியிருப்பாரே… தம்பீ, இவ்ளோ அந்நியோன்மா இருந்தவங்க… என்ன இருந்தாலும் அவுங்க துண இருந்த மாரி இருக்காது. நெனச்சி நெனச்சி உடலும், மனசும் உருகிப் போயி பொக்காயிருவாங்க. பொறவு ரொம்ப நாள் வண்டி ஓடாது. அதுனால உங்கள்ல யாராவது ஒருத்தரு நல்ல மாரியா கூட்டிட்டு போயி, புள்ளயெப் பாக்குற மாரி பாத்துக்கன்னு சொன்னாரா.
அவரு சொல்றதெல்லாம் நல்லதுதான். நீங்க என்ன அழச்சிட்டு போறதுக்கு தயாரா இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். அதுக்கு பல காரணங்கள் இருக்குன்னு தெரியும், என் பேருக்கு இருக்குற சொத்து, பென்சன் பணம் எல்லாமும் என்வசம் இருக்குங்கிறதால, எப்படியும் அழச்சிட்டு போயிரணும்னு வந்திருப்பீங்கன்னும் தெரியும். நம்மளோட வச்சிக்கிட்டா அது நமக்குன்னு நினைக்கிறீங்க. ரொம்ப நன்றி. புள்ளைக இந்தக் காலத்துல பெத்தவங்கள தன்னோட கூட்டிட்டுப் போறேங்கிறது சந்தோசமான விசயம்தான்.
ஆனா ஒருத்தருக்கும் வாயெத் தொறந்து சொல்லத் தைரியமில்ல. யாராவது முதல்ல சொல்லட்டும். அதுல சண்டை வரும். அதுக்குப் பொறவு பேசி சரி பண்ணி, கூட்டிட்டு போகலாம்னு யோசன பண்ணிக்கிட்டு இருக்கது தெரியுது.
சரி வுடுங்க. அப்பா அந்தக் காலத்துலேயே டாக்டரேட் படிச்சிருந்தாங்கதானே. நான் ரொம்ப படிக்காட்டியும், என்ன அத்தமகன்னு கட்டிக்கிட்டாங்க. எங்கயும் என்ன தம் பொண்டாட்டி காட்டிக்கிறதுல பெருமைப்பட்டாங்க. அந்த ஒரு காரணமே எனக்கு போதுமானதா இருந்துச்சி. அவுங்களுக்காக வாழ்ந்து இம்புட்டு காலத்தையும் முடிச்சிட்டேன். அவுங்களோட வாழ்ந்த வாழ்க்க எனக்கு பெருமையாவும், நெஞ்சு நிறைஞ்சாப்லயும் இருக்கு.
உங்களுக்குத் தெரியும்லா. நான் நல்லா படம் வரைவேன்னு. படிக்கப்போ கட்டுரை எழுதி பரிசெல்லாம் வாங்கியிருக்கேன். அப்பாவெ கட்டுனதுக்கு பின்னாடி எல்லாம் விட்டுப் போச்சு.
இந்தா பாருங்க. எல்லாரும் நா சொல்றத கவனிச்சிக் கேளுங்க. எனக்கு எழுவது வயசுதான் ஆவுது. என்னோட வயசுல இருவது வருசம் பொறந்த வூடு. அதெக் கழிச்சா அம்பது வரும். அதுல உங்கள வளத்து ஆளாக்கி அதுக்கு பொறவு, தெனம்தெனம் வூட்டுப் பாடம், பள்ளிப்படிப்பு நானும் சேந்துப் படிச்சி, உங்கள ஒரு எடத்துல காலூண வைக்க இருபத்தஞ்சி வருசம் ஆச்சி. மீதி காலம் ஒங்க அப்பாவுக்கு பணிவிடை, பண்டுவம்னு கழிஞ்சி போச்சி. உங்களால எட்டி ஒரு நட வர முடியாத சூழ்நில. இதுல இப்ப வந்து என்னயெ எப்படி வச்சிக்கிறதுன்னு யோசன பண்றீங்க. சரி. என்னை கூட்டிட்டு போயிட்டீங்கன்னு வச்சிக்குங்க. இதுவரைக்கும் நம்ம வீட்டுல இருக்க அத்தை எங்கப் போவும். அதெ யார் கூட்டிட்டு போகப் போறீங்க…
என்னா சத்தத்தையே காணோம். சரி கேட்டுக் கோங்க.
ஒங்க அப்பாவுக்காகவும், ஒங்களுக்காகவும் இதுவரைக்கும் நல்ல முறையில வாழ்ந்தாச்சி. அதுல குறையோ, சங்கடத்தையோ நா காணல. இதுவரைக்கும் எனக்கான வாழ்க்கையெ நா வாழவே இல்ல.
புருசன் செத்தவுடனே எல்லாம் போச்சி, என்ன இருந்து எதுக்கு, இனி வாழ்ந்து என்ன பலன். அவரே போன பின்னே எதுக்கு வாழணும்னு சொல்லி மூலையில ஒண்டிக் கிடந்து செத்துப் போறது வாழ்க்கையில்ல. புள்ளைங்க கால சுத்திக் கெடக்கிறதையும் நான் விரும்பல. இதுலாம் பழய காலத்துல சொல்லி வச்ச மூடத்தனம்.
உங்கப்பாவுக்கும் நா முடங்கிக் கெடக்கிறது புடிக்காது. அதுனால இனி எனக்கான வாழ்க்கையெ வாழணும். என்ட்ட கொஞ்சம் பணம் இருக்கு. உங்கப்பாவோட பென்சன் பணம் வேற வரும். மாசத்துக்கு எனக்கு பத்தாயிரம் செலவானாலும் மீதியெ இந்த ஊர்ல இருக்க ஏழ எளியதுகளுக்கு உதவப் போறேன். அதுல நல்லா படிக்கிற புள்ளயளெ படிக்க வைக்க உதவி பண்ணனும். ஊராட்சில தூப்புக்காரங்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமெ, எங்குப் பாத்தாலும் குப்பையா கிடக்கு. வாரத்துல ஒரு நாள ஊரச் சுத்தமாக்கி சுகாதாரமா வச்சிக்கணும். ஊரைச் சுத்தி வாய்க்கால் ஓடுது. வாய்க்காங் கரயில மரம் வைக்கணும்னு யாருக்கும் தோணல. முதல்ல மரக்கன்னுக நடணும். நம்மால இயன்ற நல்லதச் செய்யப்போறேன். மீதி வாழ்க்க அப்படி கழிஞ்சிப் போகட்டும். நீங்க எல்லாரும் தைரியமா நல்லபடியா வாழ்க்கயெ நடத்துங்க. எனக்கு ஏதாச்சி ஆனா என்ன பன்றதுன்னு தானே நினைக்கீங்க. அதுக்குத் தனியா பணம் வச்சிருக்கேன்.
அதுனால நீங்க காரியம், விசேசம்னு காத்திருக்க வேணாம். உங்க வேலய பாக்க நல்லபடியா போய்ட்டு வாங்க. இனி எனக்கு என்ன ஆவுமோ பயப்பட தேவையில்ல. எனக்கு ஏதாவது ஆயிட்டுனா வாங்க. அடக்கம் செஞ்சிட்டு போய்ட்டே இருங்க.
அத்தை சொல்றாப்லயோ, இல்ல நாட்டாமை சொல்ற மாரியோ, நான் இனிமே அப்பாவுக்காக உருகி அழிஞ்சிர மாட்டேன். ஏன் அப்படி சாகணும்? அவுங்களுக்குச் செய்யுறத செஞ்சாச்சி. வாழ வேண்டிய உசிர எதுக்கு சாகடிக்கணும். ஒவ்வொரு உயிருக்கும் அதுக்கு அதுக்குன்னு ஆசை இருக்காதா. புருசன் காலத்துக்கு பொறவாவது, பொம்பள அவெ ஆசைக்கு வாழணும். அது ஆசை வாழ்க்கயில்ல. தேவைகளற்ற அமைதியான வாழ்க்கை. அது கெடச்சா எவ்வளவு நல்லது. அது எனக்கு கிடைச்சிருக்கு. என்ன எல்லாரும் ஒரு மாரி பார்க்கிறீங்க. வீட்டு வேலைகளே வாழ்க்கையாகிப் போன பெண்களுக்கு, மீதியா கெடைக்கிற அழகான அமைதியான வாழ்க்கை. அந்த வாழ்க்கையை ஒவ்வொரு பெண்ணும் வாழ்ந்துத் தீர்க்கணும். அதுக்குத்தான் ஆசைப்படுதேன். மத்தபடி பெருமைக்கோ ஆடம்பரத்துக்கோ வாழ ஆசப்படல. அத்தான் என்ன சொல்றீக. நா சொல்றது சரிதானே…
எனக்குள்ளாற இருக்கிற, நா ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து தீர்க்கணும். ஓவியம் வரையணும், கதை எழுதணும். கார் ஓட்டணும்.
அதுக்கு இப்பதான் காலம் வந்திருக்கு. நான் நல்லபடியா இங்கயே வாழப்போறேன். அவங்க அவுங்க வேலை சோலியெப் பாக்கப் போகலாம். என்ன யாரும் கூட்டிட்டுப் போக வேணாம்.
இனி நா வாழப் போறது எனக்கான மீதி வாழ்க்கை.”
– கதைப் படிக்கலாம் – 158