– பி. லலிதா
ஞாயிற்றுக் கிழமை காலை எழுந்தது முதலே, மலர்க்கொடி பரபரப்பாக இருந்தாள். வாசல் தெளித்து, பளிச்சென்று கொஞ்சம் பெரிய கோலமாகப் போட்டாள். அங்கங்கு கிடந்த சாமான்கள், துணிமணிகள் எல்லாவற்றையும், அதனதன் இடத்தில் வைத்து, வீட்டை சுத்தம் செய்தாள்.
நடுநடுவே காலை டிபனையும் செய்து வைத்தாள். மலரின் நடவடிக்கைகளை நமட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டே, பேப்பர் படித்துக் கொண்டிருந்தான், தாமோதரன்.
குளித்து, சிம்பிளாக, அதே நேரத்தில் நேர்த்தியாக அலங்காரம் செய்துக் கொண்டு வந்த, மலர்க்கொடி…
“என்னங்க! மச மச-ன்னு இருக்காம, நீங்களும் ரெடியாகுங்க! அப்படியே கொஞ்சம் உதயா-வையும் எழுப்பி, கிளப்பி விடுங்க.!”
அது சரி மலர், “அவங்க 10 மணிக்கு மேல தான வரேன்னு சொல்லி இருக்காங்க! மணி 8 கூட ஆகலயே! என்ன அவசரம்?”
“அவங்க வரதுக்குள்ள நான் சமையலையும் செஞ்சு முடிக்கணுமில்ல. அதாங்க! ப்ளீஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க!”
“கொஞ்சம் என்ன? நிறையவே ஹெல்ப் பண்றேன். கவலையே படாத மலர். நான் சும்மா கிண்டல் பண்ணேன். கொண்டா! காய்கறி எல்லாம் அறிஞ்சு தரேன்.”
இதற்கிடையில் வாசலில் ஆட்டோ வந்து நிற்க, தாமோதரனின் தாய் விசாலாட்சி இறங்கி உள்ளே வந்தாள்.
“வாங்க அத்தை” என்ற மலரின் அழைப்பை, அலட்சியம் செய்யாமல் சுற்றுமுற்றும் பார்வை இட்டாள்.
“வாங்கம்மா! அக்கா வீட்ல எல்லாரும் சௌக்கியமா?” என்றான் தாமோதரன்.
“ஏண்டா! தாமு! என்னடா விசேஷம்? சொல்லாம கொள்ளாம என்னென்னவோ நடக்குது? நான் ஒருத்தி உயிரோட இருக்கேன்னு நினைப்பிருக்கில்ல?” என்று வேகமாகப் பேசினாள் விசாலம்.
“விசேஷம்-லாம் ஒண்ணும் இல்லம்மா? நாந்தான் அக்காக்கு ஃபோன் பண்ணி, கெஸ்ட் (guest) வராங்க. அம்மாவ அனுப்பி வை-னு சொன்னேனேம்மா?
“அத்த! டிபன் ரெடியா இருக்கு. சாப்பிட வாங்கத்த,” என்றாள் மலர்.
‘ம்கும்’ என்று கனைத்தப்படியே, உள்ளே சென்றாள் விசாலம்.
மலரின் முகம் லேசாக வாடியிருப்பதைப் பார்த்த தாமு, அவள் கையை அழுத்தி,
“விடு! இது சகஜம் தானே! கண்டுக்காம உன் வேலையப் பாரு” என்றான்.
“சரியா 10 மணிக்கெல்லாம் ரெடியாய்டு மலர்! நான் போய் ‘பயிற்சிக் கூடத்தில’ ஏற்பாடுகளைப் பாக்கறேன். அவங்க வந்தவுடனே கால் பண்ணு” என்று சொல்லிப் புறப்பட்டான்.
காலை டிபனை முடித்துக் கொண்ட விசாலம், வாசல் வராண்டாவில் போய் உட்கார்ந்துக் கொள்ளவும், பக்கத்து வீட்டு கமலம்மா வந்து சேர்ந்துக் கொண்டார்.
வருபவர்களிடம் எப்படி பேச வேண்டும், எதையெல்லாம் சொல்ல வேண்டும் என்று, மனதிற்குள் அசை போட்டப்படியே விடு வென சமையல் செய்து முடித்த மலர்க்கொடி,
துவைத்தத் துணிகளை உலர்த்த, கொல்லைப் புறம் சென்றாள்…
விடியற்காலை சென்னையில் இருந்து புறப்பட்டக் கார், 9 மணி சுமாருக்கு திருச்சி வந்து சேர்ந்தது. “பூவரசம்பட்டி” கிராமத்தை அடைவது சிரமாக இருக்கும் என எண்ணியதற்கு மாறாக, பலருக்கும் பரிச்சயமான ஊராகவும், பெயராகவும் இருந்ததால் சுலபமாக “மலர்க்கொடி-யின் வீட்டை அடைந்தனர்.
காரிலிருந்து இரண்டு பெண்களும், கையில் கேமராவுடன் ஒரு ஆணும் இறங்கினர்.
“அருணோதயம்” மலர்க்கொடி வீடுதானுங்களே இது? அவங்க இருக்காங்களா? என வினவினார் ஒரு பெண்.
திண்ணையில் அமர்ந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த விசாலம், “இது மலர்க்க்கொடி” வீடு தான். இருங்க கூப்டறேன். ஆமா நீங்கள்ளாம் யாரு? என்ன விஷயம்? என்று கேட்டுக் கொண்டே,
“மலரு! மலரு!” என்று குரலும் கொடுத்தாள்.
வந்தவர்களைப் பார்த்து, “மலர்க்கொடி-ன்னு நல்ல பேர் வச்சாங்க! கொடி மாதிரி அசஞ்சு (அசைந்து) அசஞ்சு வருவா! பாருங்க! என்றாள்.
இதற்குள் கொல்லைப் புறத்திலிருந்து வேக வேகமாக வந்த மலர்க்கொடி, வந்தவர்களை வரவேற்று, வணக்கம் சொன்னாள்.
பிறவியிலேயே, ஒருகால் சற்றுக் குட்டையாகவும் சிறுத்தும் இருந்ததால், மலர்க்கொடி நடக்கும் பொழுது, ஆடி அசைந்து வருவது போல் தான் இருக்கும். அதைத் தான் விசாலம் கிண்டலாகக் குறிப்பிட்டாள் என்பதை வந்தவர்கள் ஊகித்து விட்டனர்.
மாமியாரின் நையாண்டி மலரின் செவிகளிலும் விழுந்தது.
நிலைமையை சமாளிக்க விரும்பிய மலர்க்கொடி, “அத்தை! அவங்க பிரபல “பெண்கள் பத்திரிகை-ல” இருந்து வந்திருக்காங்க. நம்ப “அருணோதயம்” பத்தி பத்திரிக்கை-ல எழுதப் போறாங்க… என்றவள், “இவங்க என் மாமியார், விசாலம்.” என்று அறிமுகம் செய்து வைத்தாள்.
“உள்ள வாங்க! உக்காருங்க!” என்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.
வந்திருந்த பெண்மணிகள் இருவரும், பிரபல பெண்கள் இதழின் உதவி ஆசிரியர்கள் மற்றும் ஃபோட்டோகிராபர்.
“மாற்றுத் திறனாளிகள்” பற்றிய ஒரு சிறப்பிதழ் வெளியிடும் உத்தேசத்துடன் தகவல்கள் திரட்டியபோது, “பூவரசம்பட்டி அருணோதயம்” பற்றிக் கேள்விப்பட்டு, இப்பொழுது வந்திருக்கிறார்கள்.
முன்கூட்டியே தொலைபேசியில் தொடர்புக் கொண்டு, நாள், நேரம் எல்லாம் முடிவு செய்தாகி விட்டது.
வீட்டுக்குள் வந்த உதவி ஆசிரியர்கள் இருவரும், மலர்க்கொடியிடம் சகஜமாக உரையாட ஆரம்பித்தனர்.
தாமுவுக்கு ஃபோன் செய்து வரச் சொல்லி விட்டு, “சாரி, கொஞ்சம் அப்செட் ஆகி, ஆப்சென்ட் மைன்ட் ஆய்ட்டேன்.” என்றாள் மலர்.
“புரியிதுங்க! வருத்தப்படாதீங்க” என்றனர் பத்திரிக்கையாளரகள்.
“ம். இப்ப சொல்லுங்க, உங்க கதையை” என்று ஒரு பெண் கேட்க, மற்றவர் செல்ஃபோனில் ரெக்கார்ட் செய்ய ஆயத்தமானார்.
இருங்க! மொதல்ல டிபன், காபி! அப்புறம்தான் என் கதையெல்லாம்! என்ற மலரைக் கையமர்த்தி, “டிபன் சாப்டாச்சு, மதிய சாப்பாடு உங்க வீட்டில் தான்” என்றனர்.
இதற்குள் விரைந்து உள்ளே நுழைந்த தாமு, கை கூப்பி வணக்கம் சொல்லி வரவேற்றான்.
சம்பிரதாய உரையாடலுக்குப் பின் பேட்டி ஆரம்பமானது.
மலர் தன்னைப் பற்றி சொல்லத் தொடங்கினாள்.
“இதே திருச்சி மாவட்டத்தில இருக்கும் கல்லக்குடி தான் எங்க ஊரு. அப்பா தையல் கடை வச்சிருந்தார். எனக்கு ஒரு அக்கா. அம்மா, அக்கா, எனக்கு-னு, எங்க மூணு பேருக்குமே நல்லா தையல் தெரியும். அப்பாவுக்கு உதவி செய்வோம்.” என்ற மலரிடம் குறிக்கிட்ட பத்திரிக்கையாளர், “உங்க வீட்டுல இருக்கிற திரைச்சீலைகள் மற்றும் சோஃபா உரைகள் எல்லாம் உங்க கை வண்ணம் தானே!… வரும்போது வாசல்ல போட்டிருந்த கோலத்தையும் பாத்தோம்… புரிஞ்சு கிட்டோம்…” என்று புகழ்ந்துக் கூற, புன்னகையுடன் தொடர்ந்தாள் மலர்.
“எனக்கு பிறவியிலேயே கால் கொஞ்சம் ஊனமா இருந்தது. ஆனாலும், என் பெற்றோர் என்னைத் தன்னம்பிக்கையோட வளத்தாங்க. வசதிக் குறைவா இருந்தாலும், நானும் அக்காவும் நல்லா படிச்சோம். 12-வது முடிச்சதும் அக்கா ப்ரைவேட் கம்பெனி-ல வேலைக்குப் போக ஆரம்பிச்சா. நான் காலேஜ் படிக்கணும்-னு ஆசைப்பட்டேன்.
அதுக்குள்ள அக்காவுக்கு திருமணம் ஆச்சு. கல்யாண சமயத்தில் வாங்கின கடன் கொஞ்சம் இருந்தது. அதனால, நானும் அப்பாவுக்கு உதவியா தையல் வேலைல இறங்கிட்டேன்.”
“மிஸ்டர். தாமோதரனோட உங்க திருமணம் எப்படி நடந்தது?
“அத நான் சொல்றேன்” என்றுக் கூறியபடியே, முழுக்கை சட்டையை மடித்துத், தன் இடது கையைக் காட்டினான்.
அப்போது தான் அவன் கையை கவனித்த மூவருக்கும், வியப்பு ஏற்பட்டது…
தாமுவும் ஒரு மாற்றுத் திறனாளி என்பதை அறிந்து…!!
அவனுக்கு இடது கையில் விரல்கள் இல்லாமல் மழுங்கியிருந்தது.
“என் அம்மாவ பாத்திங்கல்ல. நல்ல அழகா இருப்பாங்க. ஆனா எங்கப்பாவும் என்னை மாதிரி தான், மாற்றுத் திறனாளி. அரசாங்க வேலைல இருந்தார். கொஞ்சம் வசதியான குடும்பம். அதனால அம்மாவ கட்டி வெச்சுட்டாங்க. அம்மாக்கு இஷ்டமே இல்ல. அப்பாவ சமயம் கிடைக்கும் போதெல்லாம் மட்டப் படுத்துவாங்க.”
“உங்க கிட்ட (ஆஃப் த ரெக்கார்ட்) சொல்றதுக்கென்ன?, அதுவும் நான் வேற அப்பா மாதிரி பிறந்துட்டேனா? அம்மா புலம்பல் அதிகமாயிடுச்சு. அதன் பாதிப்போ என்னவோ, நான் காலேஜ் படிச்சிட்டிருக்கும் போது, அப்பா….., மாரடைப்பால இறந்துட்டார்.
அப்பாவோட வாரிசா எனக்கு அரசாங்க வேலை கிடைச்சது. மனிதவள மேம்பாட்டுத் துறை-ல…
மாற்றுத் திறனாளிகளுக்கான அரசாங்க சலுகைகள் பற்றின தகவல்கள் எல்லாம், இந்தத் துறைக்குக் கீழ தான் வரும்.”
“ஓ!! கதை அப்படிப் போகுதா? இப்ப தான் எங்களுக்கு ஒரு லிங்க் கிடச்சிருக்கு” என உதவி ஆசிரியர் சொல்லிச் சிரித்தார்.
வெட்கத்துடன் முகத்தைத் துடைத்தபடி, மலர் ஆரம்பித்தாள்.
“எனக்குத் தையல் தெரியுங்கறதால, அரசாங்கம் உதவி செஞ்சா, 4 மிஷின வாங்கிப் போட்டு, கடைய விரிவுப்படுத்தலாம்-னு, இவர் வேலை பாக்குற ஆபீசுக்குப் போனேன்.
அப்படியே, மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு என்னல்லாம் உதவி செய்றாங்க? அதுக்கு என்னென்ன நடைமுறைகள்-னு தெரிஞ்சா, என்னைப் போன்ற மத்தவங்களுக்கும் சொல்லலாமே-னு, அடிக்கடி போக வேண்டியதாயிடுச்சு.”
“அப்ப, “அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்” மொமென்ட்-னு சொல்லுங்க.”
“எக்சாக்ட்லி,! என்ற தாமு,
“எங்க அப்பா, அம்மா பிரச்சினையைப் பார்த்தப்போதே, நான் ஒரு மாற்றுத் திறனாளியத் தான் திருமணம் செய்யணும்னு முடிவு செஞ்சிருந்தேன்.”
“உங்க அம்மா……”
“அதான்! இப்ப வரைக்கும் மனப்பூர்வமா ஒத்துக்கல. தினம் தினம் வார்த்தையால குத்துவாங்க. பழகிடுச்சு.”
“வாங்க! எங்க “அருணோதயம்” யூனிட்ட பாக்கலாம்.”
மலர்க்கொடியின் வீட்டுக்குச் சற்றுத் தொலைவில், தெருக்கோடியில் இருந்தக் கட்டிடத்தை அடைந்தார்கள்.
“அருணோதயம்”‘ – “வாழ்வில் ஏற்றம்!!, திறன் வளர்ச்சி மையம்”, என்ற அறிவிப்புப் பலகை தென்பட்டது.
உள்ளே, பத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள், அவரவர் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்களை அறிமுகப்படுத்திய தாமு, “இன்னிக்கு சண்டே, அதனால கொஞ்சம் பேர் வரல”…
இங்க நாங்க மாற்றுத் திறனாளிகளுக்கு, அவங்களோட உடல் இயல்பு, திறன், முயற்சிக்கு தகுந்தவாறு பயிற்சி அளிக்கிறோம். எங்களோட யூனிட்லயே வேலையும் கொடுக்குறோம், தனியா தொழில் தொடங்க உதவி செய்யறதோட, மார்க்கெட்டிங்கும் பண்ணித் தருகிறோம்” என்ற தாமுவிடம்,
“என்ன மாதிரியான தொழில்கள்?” என்று வினவினார்…
“தையல் தவிர,… மிதியடி, பேப்பர் கப், பாக்குத் தட்டு, ஊதுபத்தி, கூடை பின்றது-னு, பல வகையான தொழிற்பயிற்சி அளிக்கிறோம்.”
“அருணோதயம்”-ங்கற பேருக்கு ஏதாவது காரணம் இருக்கா?”
“அருணன்-னா சூரியன்.. சூரிய உதயம் மாதிரி ‘மாற்றுத் திறனாளிகள்’ வாழ்க்கையும் பிரகாசிக்கணும்-னு தான், அந்தப் பெயர்.”
“நீங்க ரெண்டு பேரும் செய்யறது மகத்தான தொண்டு. மேலும் சிறப்பா நடக்கணும்”-னு, எங்கப் பத்திரிக்கை சார்பா வாழ்த்துறோம்”…
உங்கப் பயிற்சி மையத்தப் பத்தி, வாசகர்கள் கிட்ட கொண்டு் சேர்க்குறது எங்களுக்கு மகிழ்ச்சி” என்றதோடு, தேவையான புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.
மலரின் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டு, புறப்படும்போது,
விசாலத்தை அழைத்து,
“அம்மா! நீங்க ரொம்பப் புண்ணியம் செஞ்சவங்க! அதான் தாமோதரன் மாதிரி அருமையான மகனைப் பெத்திருக்கீங்க!
உங்க மருமகள், உங்களப் பத்தி நிறைய சொன்னாங்க!…
வீட்டையும் குழந்தையையும் நீங்க பாத்துக்கறதால தான், மலர்க்கொடியால பயிற்சி மையத்த நிர்வாகம் பண்ண முடியுதுன்னாங்க!
உங்க ஒத்துழைப்பும், ஆசீர்வாதமும் தான் அவங்கள இந்த அளவு உயர்த்தி இருக்கு” என்று சொன்னதோடு, விசாலத்தைக் குடும்பத்தோடும் தங்களோடும் புகைப்படம் எடுத்தனர்.
பதினைந்து நாட்களுக்குப் பிறகு,….
மலர்க்கொடி, குறிப்பிட்ட பெண்கள் பத்திரிகை ஆசிரியருக்கு ஃபோன் செய்தாள்.
“மேடம்.!, உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. கட்டுரையும், ஃபோட்டோக்களும் அருமையா வந்திருக்கு. ஒரே பாராட்டு மழை. ஃபோன் வந்துகிட்டே இருக்கு. அதோட, மையத்துல சேர்ந்துக்க நிறைய பேர் ஆர்வமா இருக்காங்க. மேலும் சில பேர், நிதி உதவி செய்யறேன்னும் சொல்லி இருக்காங்க. உங்க ஆஃபீஸ் ஸ்டாஃப்-க்கும் என் நன்றிகள்.”…
“ஒரு பத்திரிகையோட கடமையே நல்ல தகவல்களை மக்கள் கிட்ட கொண்டு சேர்க்கறதுதானே! அததான் நாங்க செஞ்சோம். எங்களுக்கும் நிறைய பாராட்டுக் கடிதங்கள், ஃபோன் கால்ஸ் வந்துக்கிட்டிருக்கு! வாழ்த்துக்கள்!!”
“மேடம் ! முக்கியமாக ஒண்ணு சொல்லணும். என் வாழ்க்கையில, இந்த கட்டுரை வந்தப்புறம் தான், “அருணோதயம்” ஆரம்பிச்சிருக்கு!”
“அப்படியா! விபரமா சொல்லுங்க”…
“உங்க பத்திரிக்கை-ல வந்தக் கட்டுரையப் படிச்சதுல இருந்து, என் மாமியார் மனசு மாறிட்டாங்க!, “மாற்றுத் திறனாளிகளை ஏளனமா நினைச்சேன்… இத்தனை நாள் என் மனசு ஊனமா இருந்தது…. அப்ப நானும் ஒரு மாற்றுத் திறனாளிதான்-னு” சொல்லி வருத்தப்பட்டாங்க. இப்ப என் மாமியார் எனக்கு ஃபுல் சப்போர்ட்.”
“வெரி குட்!! இது நிச்சயமா எங்க பத்திரிகைக்குக் கிடைச்ச வெற்றி தான். நானும் உங்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.”
– கதைப் படிக்கலாம் – 12
இதையும் படியுங்கள் : புதிய அத்தியாயம்!!